புரட்சிக் கவிஞர் ஆனந்தக் களிப்பு
(தலைவாரிப் பூச்சூட்டி
உன்னை மெட்டு)
பாரதி தாசனார் வாழி! – எங்கள்
பாவேந்தர் புகழ்தமிழ் போலென்றும் வாழி!
பாவேந்தர் பைந்தமிழ்த் தொண்டு! அவர்
பாட்டெல்லாம் தமிழன்னை பெற்றபூச் செண்டு!
காவேந்தும் பூந்தேனை மொண்டு – தன்
கவியேந்துஞ் சொல்லிடைத் தேக்கிடும் வண்டு
வற்றாத செந்தமிழ்க் கேணி! – அவர் வண்டமிழ்ச்
சோலையில் கவியுண்ணுந் தேனீ!
மற்றோரும் போற்றிடும் ஞானி! – தமிழ்
மாக்கடல் மூழ்கியும் மூழ்காத தோணி!
புதுவைபு றந்தந்த வேந்தர்! – இந்தப்
புவிகொண்ட மானுடம் போற்றிய மாந்தர்!
பொதுமைநெஞ் சேந்திய ஏந்தல்! – உள்ளம்
பூத்திட்ட செவ்வெண்ணம் யாவுஞ்செங் காந்தள்!
சங்கத்த மிழ்விருந் துண்டு! – அவர் தந்தநற்
பாட்டெல்லாம் பனங்கற் கண்டு!
சங்கொலிப் போர்க்குரல் கண்டு – பகை
தலைதெ றித்தோடுமே காதம்வெ ருண்டு!
குடும்பத்தின் விளக்கான பெண்ணே! – நீ
கூர்தீட்டிக் கற்றிடப் பார்போற்றும் கண்ணே!
படிக்காத பெண்களர் மண்ணே! – அதில்
புல்தோன்றும் புகழ்தோன்றா! பாவேந்தர் பண்ணே!
சூட்டுவாய் தமிழ்ப்பெய ரென்றும்! வேந்தர்
சொற்படி பிறன்மொழி தவிர்த்திடல் வேண்டும்!
ஓட்டுவாய் அயல்மொழி மோகம்! – தமிழா
உள்ளத்தில் எந்நாளும் கொள்தமிழ்த் தாகம்!
தைமுதல் தான்தமி ழாண்டு! – சிந்தை
தளையிட்ட சித்திரைத் தடையினைத் தாண்டு!
பொய்க்கதை யால்சிந்தை ஆண்டு – பொய்யர்
போதித்த பொய்யழித் தெழுந்திடு மீண்டு!
இந்திப்போர் வீரத்தீப் பந்தம் – தமிழ்
எம்முயிர் நேரென்ற எந்தமிழ்ச் சொந்தம்!
வந்தாரின் வஞ்சங்கொல் சிங்கம் – அவர்
மண்டைச்சு ரங்கத்துள் தமிழ்மின்னுந் தங்கம்!
திராவிடம் போற்றிய தீரன்! – அதைச்
செப்பித்தன் நாவெல்லாம் தேன்கொண்ட மாறன்!
மறத்தினில் புறங்கண்ட சேரன்! – மக்கள்
மனத்திலே தமிழினை ஊன்றிய வேரன்!
வளையாச்செங் கோல்முதுகுத் தண்டு! – கூர்
வாளாக நேர்நிற்குந் தன்மானங் கொண்டு!
இழித்தாரை நொறுக்கும்பாக் குண்டு! – தமிழர்
இனமானக் காப்பான பெரியார்கைத் தண்டு!
பாரதி தாசனார் வாழி! – எங்கள்
பாவேந்தர் புகழ்தமிழ் போலென்றும் வாழி!
– பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம்,
தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்