சென்னை, ஏப். 23- தமிழ்நாடு அரசின் ‘விடியல் பயணத் திட்டம்’ பெண்களின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கு பேருதவியாக அமைந்துள்ளதாக ‘தி இந்து’ ஆங்கில நாளேடு பாராட்டு தெரிவித்துள்ளது.
Where does this bus go? என்ற தலைப்பில் ‘தி இந்து’ நாளேடு சிறப்புக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் தி.மு.க. ஆட்சி ஏற்பட்டதும் நடைமுறைப்படுத்தப்பட்ட விடியல் பயணத் திட்டம், பெண்களின் சேமிப்பை அதிகரித்துள்ளதுடன், அவர்கள் சுதந்திர உணர்வுடன் பயணங்களைமேற்கொள்வதற்காக வாய்ப்பைஏற்படுத்தி உள்ளதாகவும் அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்து பல்வேறு அமைப்புகள் ஆய்வுகளை மேற்கொண்டதாகவும், இந்த ஆய்வுகளின் அடிப்படையில் பஞ்சாப் மாநில அரசும் இத்திட்டத்தை செயல்படுத்தி வருவதை யும், கருநாடகா மற்றும் தெலங்கானா மாநில அரசுகளும் இது போன்ற சலுகைகளை அறிவித்துள்ளதையும் இக்கட்டுரையில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.
இத்திட்டம் பெண்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ளதுடன், மாநகரப் போக்குவரத்துக் கழகம் உட்பட ஏழு அரசுப் போக்கு வரத்துக் கழகங்களை திவால் நிலையில் இருந்து காப்பாற்றி உள்ளதாகவும்,
இத்திட்டத்திற்காக மாநில அரசு அளிக்கும் மானியம், கரோனா காலத்தில் ஏற்பட்ட இழப்பு காரணமாக சிரமத்தில் இருந்த போக்குவரத்துக் கழகங்களின் நிதி நிலைமையை சீராக்கி உள்ளதாகவும் கட்டுரை பாராட்டி உள்ளது.
இத்திட்டம் தொடங்கப்பட்டது முதல் இதுவரை ஏழு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 440 கோடி விடியல் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், நடப்பு நிதியாண்டில் தினசரி 51 லட்சம் பெண்கள் கட்டணமில்லா பேருந்து பயணங்கள் மூலம் பயனடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மூன்றாம் பாலினத்தவர்கள் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது தமிழ்நாடுஅரசின் சமூக பொறுப்பை வெளிப்படுத்துகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் பயனாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வுகள் மூலம், விடியல் பயணத் திட்டத்தால், சராசரியாக ஒரு பெண் மாதம் 800 ரூபாய் சேமிப்பதுடன், அவர்களின் சுதந்திர உணர்வு அதிகரித்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ள ‘தி இந்து’ கட்டுரை, இல்லத்தரசிகள், முறைசாரா தொழிலாளர்கள், சுயதொழில் செய்பவர்கள், மாணவிகள், தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் என பல்வேறு தரப்பினரும் விடியல் பயணத்தால் பயன்பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், புதிய பேருந்துகளை வாங்க போக்குவரத்துக் கழகங்கள் திட்டமிட்டுள்ள தாகவும், புதிய பேருந்துகள் வந்தவுடன் விடியல் பயணத்திட்டப் பேருந்துகளின் எண்ணிக்கை உயர்த்தப்படும் என அதி காரிகள் தெரிவித்துள்ளதாகவும் ‘தி இந்து’ கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.