விருந்தோம்பல் துறையில் மாணவர்களுக்கான போட்டி

viduthalai
4 Min Read

விருந்தோம்பல் துறையில் மாணவர்களுக்கான போட்டி

சென்னை, பிப்.25- வேலைவாய்ப்புக்கான விருந்தோம்பல் துறையில் இறுதியாண்டு கல்வி பயிலும் மாணவர்களுக்கான இந்தியாவின் மிகப் பெரிய சமையல் கலைக்கான போட்டியான எவரெஸ்ட் பெட்டர் கிச்சன் சமையல் சேலஞ்ச், அதன் தமிழ்நாடு மண்டலச் சுற்றை சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். இன்ஸ்டிடியூட் ஆஃப் ஓட்டல் மேனேஜ்மென்ட்டில் நிறைவு செய்தது.
இதில் பங்கேற்பாளர்கள் சமையல் திறன்களில் தங்கள் புதுமை மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத் தினர். இந்தியா முழுவதும் 15 நகரங்களில் நடைபெறும் இந்த போட்டியின் அனைத்து நகர வெற்றியாளர்களும் வரும் மார்ச் 29-30, 2024 அன்று மும்பையில், நடை பெறும் இறுதிப் போட்டிக்கு அழைக்கப்படுவார்கள். கூடுதலாக, பேக்கரி மாணவர்களுக்கு ஒரு மேடையை வழங்குவதற்காக “பெட்டர் கிச்சன் பேக்கரி சாம்பியன்” என்று ஒரே நேரத்தில் போட்டி நடத்தப்படுகிறது.
இதுகுறித்து எஸ்.ஆர்.எம். இன்ஸ்டிடியூட் ஆஃப் ஓட்டல் மேனேஜ்மென்ட்டின் இயக்குநர் டாக்டர் டி.அந்தோனி அசோக் குமார் கூறுகையில், தனது மாணவர்களுக்கு கல்வி கற்பதற்கும், அறிவூட்டுவதற்கும், அவர்களை சித்தப்படுத்துவதற்கும் வாய்ப்புகளை வழங் குகிறது என தெரிவித்துள்ளார்.

இராமேசுவரம் மீனவர்கள் புறக்கணிப்பால்
கச்சத்தீவு திருவிழா களையிழந்தது

இராமநாதபுரம்,பிப்.25- இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே நடுக்கடலில் அமைந்துள்ளது கச்சத்தீவு. இது இராமேசுவரத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவு பகுதியில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
இந்த தீவில் உள்ள அந்தோணியார் கோவில் விழா ஆண்டுதோறும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் 2 நாள்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா 23.2.2024 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனிடையே கச்சத்தீவு விழாவில் கலந்து கொள்வதற்காக 75 விசைப்படகுகளிலும், 24 நாட்டுப்படகுகளிலும் செல்ல மொத்தம் 3 ஆயிரத்து 265 பேர் ராமேசுவரத்தில் பதிவு செய்திருந்தனர். ஆனால், இலங்கையில் தமிழ்நாடு மீனவர் களுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்தால், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள இராமேசுவரத்தை சேர்ந்த 5 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்தி இராமேசுவரத்தில் மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடு பட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டு கச்சத்தீவு விழாவைப் புறக்கணிப்பதாகவும் அறிவித்துள்ளனர். இதன் காரணமாக இந்த ஆண்டு கச்சத்தீவு விழாவில் இந்தியர்கள் யாரும் பங்கேற்கவில்லை. இருநாட்டு உறவை மேம்படுத்தும் வகை யில் நடைபெறும் கச்சத்தீவு விழாவை இந்தியர்கள் புறக் கணித்துள்ளது இலங்கை அரசியல் வட்டாரத்தில் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

தமிழ்நாடு காவல்துறையில் பயங்கரவாத தடுப்பு பிரிவு தொடக்கம்

சென்னை, பிப். 25- தமிழ்நாடு காவல்துறையில் பயங்கர வாத தடுப்பு பிரிவு என்ற ஓர் புதிய அமைப்பை உருவாக்கி சமீபத்தில் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. தற்போது அந்தப் பிரிவு, முறையாக செயல்பட தொடங்கியுள்ளது. அந்த பிரிவிற்கு, காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். உள்நாட்டு பாதுகாப்பு உளவு பிரிவு டி.அய்.ஜி மகேஷ், பயங்கரவாத தடுப்பு பிரிவின் டி.அய்.ஜி.யாக கூடுதல் பொறுப்பு வகிப்பார்.
இதேபோல, மாநில உளவுப் பிரிவின் சிறப்பு பிரிவு கண்காணிப்பாளர் அருளரசு, பயங்கரவாத தடுப்பு பிரிவின் தலைமையக கண்காணிப்பாளர் பொறுப்பை கூடுதலாக வகிப்பார். கோவை பயங்கரவாத தடுப்பு சூப்பிரண்டு சசிமோகன், மதுரை பயங்கரவாத தடுப்பு பிரிவு கண் காணிப்பாளர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார். இதற்கான உத்தரவை, அரசு 23.2.2024 அன்று பிறப்பித்தது. தமிழ்நாட்டில் பயங்கரவாதிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளை இந்த பிரிவு விசாரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்றிய அரசுக்கு எதிராக
பிஜேபியே வெளியிட்ட பிரச்சாரப் பாடல்
கேரளாவில் படு குழப்பம்

திருவனந்தபுரம்,பிப்.25- மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கேரள மாநில பா.ஜ.க. தலைவர் கே.சுரேந் திரன் நடத்தும் மாநிலம் தழுவிய நடைப்பயணத்துக்காக கேரள பா.ஜ.க. சார்பில் ஒரு பிரச்சாரப் பாடல் வெளியிடப் பட்டது. இந்த பாடல் அக்கட்சியின் அதிகாரப்பூர்வ யூ-டியூப் பக்கத்தில் பகிரப்பட்டது.

அந்த பாடலில், ஊழல் நிறைந்த ஒன்றிய அரசுக்கு எதிராக போராட வருமாறு மக்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் வரிகள் இடம்பெற்றிருந்தன.
ஒன்றிய பா.ஜ.க. அரசை விமர்சிக்கும் வகையிலான வரிகள் அந்த பாடலில் இடம்பெற்றிருந்தது கேரள மாநில பா.ஜ.க.வினரிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து அந்த பாடல் அக்கட்சியின் அதிகாரப்பூர்வ யூ-டியூப் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது. ஆனால் அதற்குள் அந்த பாடல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த நிலையில், தொழில்நுட்ப பிரிவில் ஏற்பட்ட தவறு காரணமாக இந்த பாடல் வெளியானதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக கேரள மாநில பா.ஜ.க. தலைவர் கே.சுரேந்திரன் தனது நடைப்பயணத்தின்போது எஸ்.சி./எஸ்.டி. தலைவர் களுடன் மதிய உணவு சாப்பிடப்போவதாக சுவரொட்டி ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது குறித்து எஸ்.சி./எஸ்.டி. தலைவர்கள் கூறுகையில், கேரளாவில் இந்து சமுதாயத்தில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஏழைப் பிரிவினருக்கு எதிரான பா.ஜ.க. மாநிலத் தலைமையின் மனப்பான்மையை இந்த சுவரொட்டி வெளிப்படுத்தியுள்ளதாக விமர்சித்துள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *