வானமும் பூமியும் வாழ்த்தட்டும்!

Viduthalai
1 Min Read

கவிஞர் கலி.பூங்குன்றன்

ஞாயிறு மலர்

தொன்மைப் பழைமை

தொங்கு சதைகளை

சாம்பலாக்கும்

சூரிய வெப்பம்!

எண்பதாண்டுப்

பொதுத் தொண்டின்

கடலில் மிதக்கும்

தெப்பம்!

தொண்ணூற்றொன்றில்

தொடர்கிறார்

அகவை வாய்ப்பாட்டில்!

தொகை தொகையாக

நூல்கள் எப்பொழுதும்

அவர் தலைமாட்டில்!

அவர் பேசமாட்டார்

ஆதாரங்களே பேசும்

ஆடிக் காற்று போல்

ஆவேசமாய் வீசும்!

பிள்ளைப் பருவத்தில்

தொடங்கிய பிரச்சாரம்

கொள்கைப் பகை மீது

பாயும் மின்சாரம்!

‘தந்தை பெரியார்

தந்த புத்தி!’

என்றே சொல்வார்

தாக்க வரும்

தர்க்கங்களை

அந்த ஆயுதத்தால்

வெல்வார்!

மதவாத அரசியல்

‘கரோனா’

பரவும் காலம்!

கிருமிகளைக்

கொன்றொழிக்கும்

ஈரோட்டுப் பாணம்

ஒன்றே தீர்வென்று

இந்தியாவே

கொள்முதல் செய்யும்

புதிய திருப்பத்தை

உருவாக்குவது

இவரின் ஞானம்!

“தகைசால் தமிழர்”

என்று

உச்சிமோந்து

முத்தமிடுகிறது

தமிழ்நாடு அரசு!

அடைகாக்கும்

தாய்க்கோழியாம்

தமிழர் தலைவர்

வாழ்வின் நீட்சி

சமூகநீதிக்கான

மீட்சி!

நூற்றாண்டும் கடந்து

வாழ்வது

அவருக்காக அல்ல

நாட்டின் நலனுக்காக!

வாழ்வார் – வாழ்ந்து

காட்டுவார்!

“வீரமணி வென்றிடுக

வெற்றிமணி ஒலித்திடுக!”

என்றார்

முத்தமிழ் அறிஞர் கலைஞர்!

வாழ்க தலைவர்

வீரமணி!

வானமும், பூமியும்

வாழ்த்தட்டும்!

அந்தக் கழனியில்

மக்கள் நலனும்

வளமும்

செழிக்கட்டும்!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *