சென்னை,ஜன.12- தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் வரும் 19ஆம் தேதி ஆளுநருக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் படும் என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் ஒற்றுமை நடைப்பயணத்தின் தொடர்ச்சியாக, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ‘அரசி யலமைப்பை பாதுகாப்போம்; கையோடு கைகோர்ப்போம்’ என்ற பிரச்சார இயக்கம் நடத்தப்பட உள்ளது.
இதுகுறித்த ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை யில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று (11.1.2023) நடந்தது. பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணத்தின் தொடர்ச் சியாக, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஏற்கெனவே 234 தொகுதிக ளிலும் தலா 100 காங்கிரஸ் கொடிகளை ஏற்றும் பணி நடந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டில் ஜன.26ஆம் தேதி தொடங்கி 2 மாத காலத்துக்கு ‘அரசியலமைப்பை பாதுகாப்போம்; கையோடு கைகோர்ப்போம்’ என்ற பிரச்சார இயக்கத்தை நடத்த திட்டமிடப் பட்டுள்ளது.
ஆரம்பத்திலேயே எதிர்ப்பு: காவல் துறை மற்றும் உளவு பிரிவு பின்புலம் கொண்ட ஆர்.என்.ரவி, தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப் பட்டபோதே எதிர்ப்பு தெரிவித்தேன். அதை 100 விழுக்காடு நிரூபிக்கும் வகையில் சட்டப் பேரவையில் அவர் நடந்து கொண்டார்.
நாட்டுப்பண் பாடுவதற்கு முன் பாகவே பேரவையைவிட்டு வெளி யேறியுள்ளார். அவரது ஜனநாயக விரோதப் போக்கை கண்டித்து, தமிழ்நாட்டின் 234 தொகுதிக ளிலும் அவருக்கு எதிராக வரும் 19ஆம்தேதி ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
பிரியங்கா தலைமையில் பேரணி
பிரச்சார இயக்கத்தின் மேலிட பார்வையாளர் கொடிக்குன்னில் சுரேஷ் கூறியபோது, ‘‘கிராமப்புறங் களில் வீடு வீடாக சென்று, ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயண நோக்கம், ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத செயல்கள் குறித்து விளக்க இருக்கிறோம். ஒவ்வொரு மாநிலத்திலும் பிரியங்கா காந்தி தலைமையில் மகளிர்பேரணி நடத் தவும் திட்டமிடப் பட்டுள்ளது’’ என்றார்.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ், செயலாளர் சிரி வெல்ல பிரசாத், மாநில துணை தலைவர் ஆ.கோபண்ணா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.