பக்தி – புத்தி!

Viduthalai
1 Min Read

இரிடியம் முதலீடு என்ற பெயரில் பொதுமக்களை ஒரு மோசடிக் கும்பல் ஏமாற்றி வருவதாக தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள காணொலியில் தெரிவித்துள்ளார்.

5 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் அடுத்து வரும் 2 ஆண்டுகளில் 3 கோடி ரூபாய் வரை லாபம் கிடைக்கும் என அக்கும்பல் ஆசை வார்த்தை கூறி மோசடியில் ஈடுபடுவதாக அவர் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக சேலம் கன்னியாகுமரி மாவட்டங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கேரளாவிலிருந்தும் தமிழ்நாடு காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் தங்கள் பணத்தை மோசடி கும்பலிடம் பறி கொடுத்து ஏமாறாமல் இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இரிடியம் என்பது ஒரு மிகவும் கடினமான தன்மை கொண்ட உலோகம் மட்டுமே! அரிதாக கிடைத்தாலும் இது விலைமதிக்கத்தக்க உலோகம் அல்ல, மேலும் இத்தனிமத்திற்கு எந்த ஒரு சிறப்புக் குணமும் கிடையாது. இருப்பினும் ‘கோவில் கோபுரக்கலசங்களில் மந்திரங்கள் ஓதி வெயிலில் இருப்பதால் சூரியபகவானின் அருள் பெற்றுதெய்வத்தன்மை பெற்றுவிடுகிறது. இதனை வீட்டில் வைத்தால் கோடிகள் கொட்டும், தங்கம் வைரம் புதையலாகக் கிடைக்கும்’ என்று கூறி பக்த கோடிகளை ஏமாற்றி விடுகிறார்கள். 

சேலம், கோவை போன்ற மாவட்டங்களில் சிலர் 40 கோடி ரூபாய் வரை கூட இரிடியம் கும்பலிடம் ஏமாந்துள்ளனர்.   கடந்த ஆண்டு திரைப்பட நடிகர் விக்னேஷ் இரிடியம் மோசடி கும்பலிடம் 1.5 கோடி ரூபாய் ஏமாந்துள்ளார். ஒன்றுமில்லாத ஓர் இத்துப்போன பழைய சொம்பை ‘தெய்வ அருள் கொண்ட இரிடியம்’ என்று விற்கின்றனர். இதனையும் கடவுள் நம்பிக்கை என்ற பெயரால் 50 ரூபாய்கூட பெறாத பொருளை பல கோடிகளில் வாங்குகின்றனர்.

பக்திப் போதை அபினைவிட மோசமானது! பக்தி வந்தால் புத்தி போகும் என்பார் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்.

இது வெறும் வாய் வார்த்தையல்ல என்பதை கண்கூடாக இப்பொழுதாவது தெரிந்துகொள்வார்களா?

 –  மயிலாடன்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *