இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான ஈ.எம்.சுதர்சன நாச்சியப்பன் அவர்கள் (வயது 79) இன்று காலை மறைவுற்றார் என்ற அதிர்ச்சிச் செய்தி நம்மை வந்து தாக்கியது. சிவகங்கை மாவட்டம் ஏரியூரில் பிறந்து சட்டக் கல்வியும், முனைவர் பட்டமும் பெற்றவர். உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞராக இருந்ததுடன், இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும், பின்னர் மாநிலங்களவை உறுப்பினராகவும், ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சராகவும் பணியாற்றியவர்.
சீரிய சமூகநீதி உணர்வாளராகத் திகழ்ந்தவர். பணியாளர் விவகாரங்கள், பொதுக் குறைகள், சட்டம் மற்றும் நீதி தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவிற்குத் தலைமை தாங்கி, பட்டியல் ஜாதியினர், பட்டியல் பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோருக்கான இடஒதுக்கீட்டுக் கொள்கைகள் குறித்து 2005–2006-இல் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த அறிக்கையைச் சமர்ப்பித்தவர். அவரும், அவரது சகோதரர் பகீரதன் நாச்சியப்பன் அவர்களும் நம் மீது எப்போதும் பாசம் கொண்டவர்கள்.
தோழர் சுதர்சன நாச்சியப்பன் அவர்களின் மறைவுக்கு நமது இரங்கலையும், சகோதரர் பகீரதன் நாச்சியப்பன், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் மாணிக்கம் தாகூர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள், காங்கிரஸ் கட்சியினருக்கு நமது ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
(கி.வீரமணி)
தலைவர்,
திராவிடர் கழகம்
17.09.2026
சென்னை
குறிப்பு: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் மாணிக்கம் தாகூர் அவர்களுக்குத் தொலைப் பேசியில் தமது ஆறுதலைத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தெரிவித்தார்.
