பெங்களூரு, செப்.12 கருநாடகத்தின் அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவர் சங்கத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமென மாநில அரசு கடந்த நேற்றுமுன்தினம் (10.9.2026) உத்தர விட்டுள்ளது.
முதற்கட்டமாக கருநாடக அரசின் உயர்கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு, அரசு உதவிப் பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் மாணவர் சங்கத் தேர்தல்கள் நடத்தப்படவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இதன்படி, ஒவ்வொரு கல்வி நிலையங்களின் மாணவர் சங்கங்களிலும் ஒரு தலைவர், 2 துணைத் தலைவர்கள், 2 பொதுச் செயலர்கள் மற்றும் 2 கூடுதல் செயலர்கள் என மொத்தம் 6 பேர் கொண்ட குழுவினர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். ஆண் – பெண் என இருபாலர் பயிலும் கல்வி நிலையங்களில் துணைத் தலைவர் மற்றும் கூடுதல் செயலர் பதவிகளில் பெண்களுக்குத் தலா ஒரு இடம் ஒதுக்கப்படுகிறது.
இத்துடன், கல்வியாண்டுத் துவங்கிய முதல் 5 வாரங் களுக்குள் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமென்றும், பிரசாரங்களுக்கு சுடரொட்டிகள் மற்றும் விளம்பரப் பதாகைகள் ஆகியவைப் பயன்படுத்தக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிட விரும்பும் மாணவர்கள் முந்தைய கல்வியாண்டில் குறைந்தபட்சம் 75% வருகையைப் பெற்றிருக்க வேண்டும் மற்றும் எந்தவொரு குற்றவியல் பதிவும் அவர்கள் மீது இருக்கக் கூடாது எனும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, கருநாடகத்தில் கடந்த 1990 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் வீரேந்திர பாட்டீல் தலைமையிலான அரசு கல்வி நிலையங்களில் நடத்தப்படும் மாணவர் சங்கத் தேர்தல்களுக்குத் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
