சென்னை, செப். 4- முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் பேசுவது போன்று ஏஅய் தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட காணொலி ஒன்று பரவியது. ஹிந்தி மொழியில் இடம்பெற்றிருந்த அந்த காணொலியில், ‘பொதுமக்களுக்கு பண உதவி தேவைப்பட்டால் குறிப்பிட்ட வாட்ஸ்அப் எண்ணைத் தொடர்பு கொள்ளவும்’ என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால், பொதுமக்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் நோக்கில் இந்த போலிக் காணொலி உருவாக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து மாநில சைபர் கிரைம் காவல் துறையினர் சிபிசிஅய்டி சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்தனர். இதையடுத்து, கடந்த 1ஆம் தேதி வழக்குப்பதிவு செய்து போலி காணொலி வெளியிட்டவர் குறித்து விசாரித்து வருகின்றனர். காணொலி தொடர்பான போலி சமூக வலைதள அய்.டி., பதிவுகள் குறித்த தகவல்களையும் மெட்டா நிறுவனத்திடம் காவல் துறையினர் கேட்டுள்ளனர்.
மேலும், சமூக வலைதளங்களில் பரவி வரும் போலி காணொலியை உடனடியாக நீக்குவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘முதற்கட்ட விசாரணையில், முதலமைச்சர் ஜோசப் விஜய் தோற்றத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இது போன்ற பல ஏஅய் காணொலிகள் முகநூல் மட்டுமின்றி, பல்வேறு சமூக வலைதளங்களிலும் பரப்பப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது. இந்த காணொலிகளில் சில, பாகிஸ்தானைச் சேர்ந்ததாகக் கருதப்படும் முகநூல் கணக்குகள் மூலம் பகிரப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.
போலி காணொலிகளை உருவாக்கிப் பரப்பியவர்களை விரைவில் அடையாளம் கண்டு, அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும். அதோடு சமூக வலைதளங்களில் பரவி வரும் போலிப் பதிவுகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனர்.
இது போன்ற மோசடி காணொலிகளில் குறிப்பிடப்படும் வாட்ஸ்அப் குழுக்களில் இணையவோ, அவர்கள் கூறும் வழிமுறை களைப் பின்பற்றவோ கூடாது. முதலமைச்சர் போன்ற தோற்றத்தில் ஏஅய் மூலம் உருவாக்கப்படும் ‘மப் ஃபேக்’ காணொலிகளை உண்மை என நம்பி ஏமாறாமல் பொதுமக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் கேட்டுக் கொண்டுள்ளார்.
