சத்தீஸ்கர் மாநிலம் காங்கர் மக்களவைத் தொகுதியின் பி.ஜே.பி. எம்.பி. போஜ் ராஜ் நாக், பாலோட் மாவட்டம், டொண்டி லோரா பகுதியில் நேற்று முன்தினம் (27.8.2026) நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டார்.
மோசமான வானிலை; மேக மூட்டம், மழை பொழிவதற்கான அறிகுறிகள், நிகழ்ச்சியில் முதலமைச்சர் வருவதாக இருந்த சூழலில், முதலமைச்சர் வருவாரா, கலந்துகொள்வாரா என்ற பரபரப்பு!
ஆனாலும் சத்தீஸ்கர் முதலமைச்சர் விஷ்ணுதேவ் சாய் வந்து சேர்ந்தார்.
அந்த மேடையில் பி.ஜே.பி. எம்.பி., போஜ்ராஜ் நாக் பேசும்போது குறிப்பிட்ட ஒரு செய்தி, முதலமைச்சர் உள்பட, மேடையில் இருந்தவர்கள், நிகழ்ச்சியில் பார்வையாளர்களாகக் கூடியிருந்தவர்கள் மத்தியில் வெடிச் சிறப்பைக் கட்டவிழ்த்துவிட்டது.
அப்படி என்னதான் பேசினார், அந்த எம்.பி.? ‘‘மழை கடுமையாக வரும் என்று எதிர்பார்த்த நிலையில், எங்கே மழை குறுக்கிட்டு விழாவை நடக்கவிடாமல் தடுத்துவிடுமோ என்ற அச்சம் எனக்குள் எழுந்தது. நான் என்ன செய்தேன் தெரியுமா? பிரார்த்தனை செய்து, எலுமிச்சைப் பழத்தை வெட்டினேன். உடனே மழை போயே போச்சு – நின்று விட்டது’’ என்றாரே, பார்க்கலாம்!
முதலமைச்சர் உள்பட வெடிச் சிரிப்புக்குக் காரணமானது அவரது பேச்சு!
‘‘சூ, மந்திரக்காளி, மழையே நின்று போ’’ என்று பிரார்த்தனை செய்து, எலுமிச்சைப் பழத்தை வெட்டியதுதான் மழை நின்றதற்குக் காரணமாம்!
மழை பெய்யாததற்குக் காரணம், இந்தப் பொய் மூட்டை மந்திரத்தை அவிழ்த்துக் கொட்டியதுதானாம்!
எப்படிப்பட்டவர்களை எல்லாம் பி.ஜே.பி. எம்.பி.,க்களாகத் தேர்ந்தெடுத்துள்ளது பார்த்தீர்களா?
பிரார்த்தனைக்கும், மந்திரத்திற்கும் அவ்வளவு சக்தியிருந்தால், நேபாளத்திற்கு அவரைப் பல்லாக்கில் வைத்து அழைத்துச் சென்று, எலுமிச்சைப் பழத்தை அறுக்கச் செய்து, மந்திரத்தை ஏவிடச் செய்திருக்கலாமே? நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களின் பரிதாப மரணத்தைத் தவிர்த்திருக்கலாமே!
வெட்கக்கேடு! முதலில் அந்த பி.ஜே.பி. ஆசாமியின் தலையில் ஒரு எலுமிச்சைப் பழத்தை வெட்டித் தேய்க்கச் சொல்லவேண்டும்.
பைத்தியங்களுக்கு இதுதான் பரிகாரம் என்று சொல்வதும் இந்த மவுடிகர்கள்தானே!
– மயிலாடன்
