சிங்கப்பூர், ஆக.27- சிங்கப்பூரில் பிறப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்குக் கடுமையாகச் சரிந்துள்ள தால், மக்கள் தொகையைப் பெருக்க அந்நாட்டுப் பிரதமர் லாரன்ஸ் வாங் புதிய மாபெரும் திட்டத்தை அறிவித்துள்ளார்.
இதன்படி, பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 17 வயது ஆகும் வரை மொத்தம் சுமார் ரூ.53 லட்சம் (70,000 சிங்கப்பூர் டாலர்) பல்வேறு கட்டங்களாக நிதியுதவியாக வழங்கப்படும்.
இதில் குழந்தை பிறந்தவுடன் கைச்செலவாக ரூ.7.5 லட்சமும், அதன் பிறகு ஆண்டுதோறும் தலா ரூ.1½ லட்சமும் பெற்றோரின் கணக்கில் செலுத்தப்படும். மேலும், குழந்தை பராமரிப்புச் செலவுகள் குறைப்பு, பெற்றோருக்குக் கூடுதல் விடுமுறை மற்றும் வீடு வாங்குவதற்கான சலுகைகளும் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
1970-களில் ‘2 குழந்தைகளே போதும்’ என்று பிரசாரம் செய்த சிங்கப்பூர் அரசு, தற்போது மக்கள் தொகை சரிவைத் தடுக்க இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.
