புதுடில்லி, ஆக.24- 1978ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய ‘தொழில்’ குறித்த விளக்கம், 2020-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தொழில்துறை உறவுகள் சட்டத்தை விளக்குவதற்கு வழிகாட்டியாக இருக்காது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
1978ஆம் ஆண்டு வழங்கப்பட்ட ‘தொழில்’ குறித்த விளக்கம், 2020ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தொழில்துறை உறவுகள் சட்டத்தை விளக்குவதற்கும் அடிப்படையாக பயன் படுத்தப்பட வேண்டுமா என்ற கேள்வி உச்சநீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன் வைக்கப்பட்டது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அமர்வில், நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, பி.எஸ். நரசிம்மா, தீபங்கர் தத்தா, உஜ்ஜல் புயான், சதீஷ் சந்திர சர்மா, ஜாய்மால்யா பாக்சி, அலோக் ஆராதே மற்றும் விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இதற்கு முன்னதாக, தொழில்துறை உறவுகள் குறித்த வழக்கின் மீதான தீர்ப்பு கடந்த மார்ச் மாதம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
1978-ஆம் ஆண்டின் தீர்ப்பு
இதனிடையே, 1978 பிப்ரவரி 21-ஆம் தேதி, ‘பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம்’ தொடர்பான வழக்கில் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு, ‘தொழில்’ என்பதற்கான விரிவான வரையறையை வழங்கியது. அப்போது நீதிபதி வி.ஆர். கிருஷ்ணன் வழங்கிய தீர்ப்பில், தொழில் நிறுவனங்களின் செயல்பாடுகளை அடையாளம் காண ‘மும்முனைச் சோதனை’ வகுக்கப்பட்டது.
அதன்படி, முதலாளி மற்றும் தொழிலாளர்களின் ஒருங்கிணைந்த செயல்பாட்டின் மூலம் பொருட்கள் அல்லது சேவைகள் உற்பத்தி செய்யப்படுவது அல்லது வழங்கப்படுவது போன்ற முறையான நடவடிக்கைகள் ‘தொழில்’ என்ற வரையறைக்குள் வரலாம் எனக் கூறப்பட்டது.
சட்டப்பூர்வ பாதுகாப்பு
இந்த விரிவான விளக்கத்தின் காரணமாக, மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், சங்கங்கள் மற்றும் பல்வேறு நலத்துறை அமைப்புகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் 1947-ஆம் ஆண்டு தொழில்துறைத் தகராறுகள் சட்டத்தின் கீழ் சட்டப்பூர்வ பாதுகாப்பு கிடைக்கும் நிலை உருவானது.
தொடர்ந்து, 1978-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட இந்த தீர்ப்பு, 2020-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தொழில்துறை உறவுகள் சட்டத்தை விளக்குவதற்கும் அடிப்படையாக பயன் படுத்தப்பட வேண்டுமா என்ற கேள்வி உச்சநீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன் வைக்கப்பட்டது.
இதில் பெரும்பான்மை நீதிபதிகள், 1978-ஆம் ஆண்டு தீர்ப்பில் உருவாக்கப் பட்ட ‘மும்முனைச் சோதனை’ செல்லு படியாகும் என்றாலும், அதனை 2020-ஆம் ஆண்டு சட்டத்திற்கான பொதுவான வழிகாட்டியாகக் கருத முடியாது எனத் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து, 2020-ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் தொடரப்படும் புதிய வழக்குகள், அந்தச் சட்டத்தின் தனிப் பட்ட விதிகள் மற்றும் ஒவ்வொரு வழக்கின் உண்மைகள், சூழ்நிலைகளின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்பட வேண்டும் என்றும் அமர்வில் இருந்த நீதிபதிகள் கூறினர்.
அதே நேரத்தில், தற்போது ரத்து செய்யப்பட்ட 1947ஆம் ஆண்டு தொழில்துறைத் தகராறுகள் சட்டத்தின் கீழ் ஏற்கெனவே நிலுவையில் உள்ள தொழிலாளர் தொடர்பான வழக்கு களுக்கு 1978-ஆம் ஆண்டு ‘மும்முனைச் சோதனை’ தொடர்ந்து பொருந்தும் என உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
நீதிபதிகள் கருத்து வேறுபாடு
இதனைத் தொடர்ந்து, தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு, ‘தொழில்’ என்பதன் வரையறை குறித்து ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு 1978-ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரும் மனு செல்லுபடியாகும் வகையில் தாக்கல் செய்யப்பட்டது என்று பெரும்பான்மைத் தீர்ப்பின் மூலம் உறுதி செய்தது.
தலைமை நீதிபதி, தனக்காகவும் நீதிபதிகள் சதீஷ் சந்திர சர்மா, அலோக் ஆராதே மற்றும் விபுல் எம் பஞ்சோலி ஆகியோருக்காகவும் பெரும்பான்மைத் தீர்ப்பை எழுதினார். ‘தொழில்’ என்பது எதைக் குறிக்கிறது என்பதை உறுதி செய்வதற்காக 1978-ஆம் ஆண்டு தீர்ப்பில் உருவாக்கப்பட்ட ‘மும்முனைச் சோதனை’ செல்லுபடியாகும் என்று அந்த தீர்ப்பில் இருந்தது.
பெரும்பான்மை தீர்ப்பின்படி, இது 2020-ஆம் ஆண்டு சட்டத் தொகுப்பிற்குப் பொருந்தாது என்றும், புதிய சட்டத்தின் கீழ் தொடரப்படும் எந்தவொரு புதிய வழக்கும் அதன் உண்மைகள் மற்றும் சூழலின் அடிப்படையில் விசாரிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், தற்போது ரத்து செய்யப்பட்ட 1947-ஆம் ஆண்டு தொழில்துறை தகராறு சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட தொழிலாளர் தொடர்பான நிலுவையில் உள்ள வழக்குகளில் “மும்முறைச் சோதனை” பயன்படுத்தப்படும்.
தீர்ப்பை மறுபரிசீலனைச் செய்ய…
இதனைத் தொடர்ந்து, நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் ஜாய்மால்யா பாக்சி ஆகியோர், தலைமை நீதிபதியின் பெரும்பான்மைத் தீர்ப்புடன் பெருமளவில் உடன்பட்டு, தனித்தனித் தீர்ப்புகளை எழுதினார்கள். “தொழில்” என்ற சொல்லின் வரையறை குறித்த 1978-ஆம் ஆண்டு தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரும் மனு செல்லுபடியாகும் என்று அவர்கள் தீர்ப்பளித்தனர்.
பெரும்பான்மையினர் இந்த மேற்கோள் செல்லுபடியாகும் என்று கருதுவதாகவும், இந்தத் தீர்ப்பு வருங்காலங்களில் இருந்து மட்டுமே பொருந்தும் என்பதை நாங்கள் மிகத் தெளிவாகக் கூறியுள்ளோம் என்றும் தெரிவித்தனர். மேலும், நிலுவையில் உள்ள வழக்குகள் (1947 தொழில்துறை தகராறு சட்டத்தின் கீழ்) பெங்களூரு நீர் வழங்கல் (1978 தீர்ப்பு) வழக்கானது மும்முனை வரையறையின்படி தீர்க்கப்படும் என்றும் தலைமை நீதிபதி கூறினார்.
மேலும், 1978 ஆம் ஆண்டு தீர்ப்பு சரியானது என்றும், அதை மறுபரிசீல னைக்கு அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை என்றும் நீதிபதி நாகரத்னா கருத்து தெரிவித்தார். தொடர்ந்து, நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, தீபங்கர் தத்தா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வுக்குச் செய்யப்பட்ட தலைமை நீதிபதி உள்ள சில நீதிபதிகளின் தீர்ப்பிலிருந்து மாறுபட்டனர்.
இந்நிலையில், 1947-ஆம் ஆண்டு சட்டம் தற்போது ரத்து செய்யப்பட்டு, ஒரு புதிய சட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டதால், இந்த விவகாரம் ஒரு கல்விசார் பயிற்சியாகிவிடும் என்பதை ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு ஏற்றுக் கொண்டது. 1978 ஆம் ஆண்டு தீர்ப்பில் வகுக்கப்பட்ட கோட்பாடுகள், 2020ஆம் ஆண்டு சட்டத்தின் விளக்கத்திற்கு ஒரு முழுமையான அடிப் படையாகக் கருதப்படாது என்றும், அதன் விளக்கம் தனித்தனியாகப் பரிசீலிக்கப்படும் என்றும் தலைமை நீதிபதி சூர்ய காந்த் கூறினார்.

