புதுடில்லி, ஆக. 21– வினாத்தாள் கசிவு மற்றும் அயோத்தி ராமன் கோயில் நன்கொடை முறைகேடு உள்ளிட்ட விவகாரங்களை அடிமட்டம் வரை கொண்டு சென்று, ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக நாடு முழுவதும் தீவிர பிரச்சாரத்தை முன்னெடுக்க காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
டில்லியில் உள்ள இந்திரா பவனில் 19.8.2026 அன்று நடைபெற்ற இக்கூட்டத்திற்கு கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமை தாங்கினார். இதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கே.சி. வேணுகோபால் மற்றும் ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் பங்கேற்றனர் கூட்டத்திற்குப் பின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் அளித்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்த முக்கிய விவரங்கள்
மாணவர்கள் விழிப்புணர்வுப் பிரச்சாரம்: வினாத்தாள் கசிவு பிரச்சினை மற்றும் மாணவர்கள் மீதான அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக ‘மாணவர் எழுச்சி’ என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை 800 நகரங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சில கூட்டங்களில் ராகுல் காந்தி நேரடியாகப் பங்கேற்பார்
கல்வி முறை சீரமைப்பு: தேர்வு மற்றும் கல்வி முறையை முழுமையாக மறுசீரமைக்க, வல்லுநர்களுடன் இணைந்து அறிக்கை தாக்கல் செய்ய காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநில முதலமைச்சர்களுக்கு மல்லிகார்ஜூன கார்கே உத்தரவிட்டுள்ளார்.
ராமன் கோயில் நன்கொடை விவகாரம்: அயோத்தி ராமன் கோயில் நன்கொடை திருட்டு விவகாரத்தை கிராம பஞ்சாயத்து அளவிலான அடிமட்ட பிரச்சாரமாக கொண்டு செல்ல மாநில காங்கிரஸ் கமிட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எல்லை பாதுகாப்பு மற்றும் மகளிர்க்கான இடஒதுக்கீடு: அருணாச்சல பிரதேச எல்லையில் சீன ஆக்கிரமிப்பு குறித்து கவலை தெரிவிக்கப்பட்டதுடன், தற்போதைய 543 மக்களவை இடங்களின் அடிப்படையிலேயே மகளிர்க்கான இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
உத்தரகாண்டில் கார்கே பங்கேற்ற நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு, அந்த இடம் சுத்தம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தினார்.
