ராமேசுவரம், ஆக.14 ராமேசுவரத்தில் இருந்து நேற்று (13.8.2026) 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இதில் விசைப்படகு ஒன்றில் 9 மீனவர்கள் சென்று இருந்தனர். எல்லைதாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ராமேசுவரம் மீனவர்கள் 9 பேரையும் கைது செய்த இலங்கை கடற்படையினர் அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
நடுக்கடலில் மீன்பிடித்தபோது 2 ரோந்து கப்பல்களில் இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர். விசைப் படகையும், அதில் இருந்த 9 மீனவர்களையும் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி சிறைப்பிடித்து கைது செய்தனர். மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். 5 நாட்களுக்கு முன்பு ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகின் என்ஜின் பழுதாகி, இலங்கை பகுதியில் கரை ஒதுங்கியதால் 11 மீனவர்கள் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்தநிலையில் மீண்டும் 9 மீனவர்களை இலங்கை கடற்படை அத்துமீறி கைது செய்தது ராமேசுவரம் மீனவர்களை வேதனை அடையச்செய்துள்ளது.
