மும்பை, ஆக.12 மும்பையின் காட்கோபரில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் புதைந்ததில் ஆறு பேர் உயிரிழந்தனர்; மேலும் 4 பேர் காயம் அடைந்தனர், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மும்பை காட்கோபரில் உள்ள சிராக் நகரில் இன்று (12.8.2026) அதிகாலையில் மலைப் பகுதியிலிருந்து மிகப்பெரிய கல் ஒன்று உருண்டு வந்து கீழே இருந்த மூன்று வீட்டின்மேல் விழுந்தது. இந்த நிலச்சரிவில் வீடுகள் புதைந்ததில், தூங்கிக் கொண்டு இருந்தவர்கள் இடிப்பாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.
தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர். இடிபாடுகளில் இருந்து ஆறு பேர் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்பட்டனர். ஒருவர் உடலை மட்டும் அடையாளம் காணும் பணியில் சிக்கல் நீடிக்கிறது. மேலும் 4 பேர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இறந்தவர்கள் குடும்பத்திற்குத் தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.இடிபாடுகளுக்கு அடியில் இன்னும் சிக்கியிருக்கக் கூடியவர்களை, மீட்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
