பைசாபாத், ஜூலை 30–- அயோத்தி ராமன் கோயிலில் கிடைக்கப்பெற்ற நன்கொடை நிதி மற்றும் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகார்கள் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இந்த முறைகேடு குறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் தடயவியல் தணிக்கையாளரும் இந்த ஆய்வில் சேர்க்கப்பட்டுள்ளார். நிதி கையாடலில் தொடர்புடையதாகக் கோயில் ஊழியர்கள் மற்றும் வங்கியின் முன்னாள் ஊழியர் உட்படப் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நிதி முறைகேடு: சர்ச்சை தீவிரமடைந்த நிலையில், சிறீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச்செயலாளராக இருந்த மேனாள் ஆர்.எஸ்.எஸ் பிரமுகரும் மோடியின் நெருங்கிய நண்பருமான சம்பத் ராய், பதவி விலகல் கடிதம் தந்தார்.
கோயிலின் ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் சீரமைத்து வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வருவதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக, சிறீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் புதிய செயலாளராக மகாராட்டிராவைச் சேர்ந்த ஜெகதீஷ் அபாலே நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முக்கிய பிரமுகரான இவர், ஏற்கெனவே ராமன் கோயில் கட்டுமானப் பணிகளின் மேலாளராகச் செயல்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது குடும்பத்துடன் கோயில் வளாகத்திலேயே வசித்து வரும் இவரது நியமனத்துக்கு, வரும் செப்டம்பர் 2-ஆம் தேதி நடைபெறவுள்ள அறக்கட்டளையின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
