சமயம், இலக்கியம், மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்துள்ள திருவாளப்புத்தூருக்கு அருகிலுள்ள நடுத்திட்டு என்னும் சிற்றூரில் சீனிவாசப் பிள்ளை – சொர்ணத்தம்மாள் இணையருக்கு குன்றக்குடி அடிகளார் பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் அரங்கநாதன். தமிழ்நாடு அரசின் முதல் திருவள்ளுவர் விருது 1986 இல் இவருக்கு வழங்கப் பட்டது. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சிறப்பு டாக்டர் பட்டம் (D.Litt) 1989 இல் வழங்கிச் சிறப்பித்தது.
இந்திய அரசின் அறிவியல் செய்தி பரப்பும் தேசியக்குழு, 1991 இல் தேசிய விருது வழங்கிச் சிறப்பித்தது.
இருபதாம் நூற்றாண்டின் சமய – சமுதாய ஞானியாகப் பாராட்டப் பெறுகிற தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் எதைச் சொன்னாலும் தெளிந்து சொல்வார் – தெளிவாகவும் சொல்வார். தவத்திரு அடிகளார் அவர்களின் எழுத்தும் சொல்லும், சிந்தனையும் செயலும் மக்கள் சமுதாயத்தின் நல்வாழ்வை அடிப்படையாகக் கொண்டே அமையும். “நாம் காணும் சமய நெறி, சமுதாயத் தொடர்புடைய நெறி, சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக – சமுதாயத்தின் நல் வாழ்வுக்காக வேண்டுவன செய்யக் கடமைப்பட்டிருக்கிறது. அது, மனித சமுதாயத்தின் சிக்கல்கள் தொல்லைகள் அனைத்தையும் மாற்றியமைக்கின்ற பொறுப்பும் கடமையும் சமய நெறிக்கு இருக்கிறது” என்று கூறிச் சமயத்திற்கும் சமுதாயத்திற்கும் ஒரு பெரும் இணைப் புப் பாலத்தை உருவாக்கும் பணியை அவர் இயன்ற வகையெல்லாம் செய்து வந்தார். சமயவாதிகளிடையேயும் சமுதாயவாதிகளிடையேயும் அவர் ஒரு புரட்சிச் சின்னமாகவே திகழ்ந்தார். அவர், சைவநெறி பரப்பும் திருமடத்தின் தலைவராகப் பொறுப்பேற்றி ருந்தாலும் அவரிடத்துச் சமய வெறியையோ, பிறசமயக் காழ்ப்புணர்வையோ காண இயலாது.
