தூத்துக்குடி, ஜூலை 11- பனைத் தொழிலைக் காக்கும் வகையில் வீட்டில் உள்ள பனை மரத்திற்கு மாடி போல் படிக்கட்டு அமைத்து விவசாயி அசத்தி யுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள நடுவக்குறிச்சி பஞ்சாயத்துக்குட்பட்ட சாலைப்புதூர் கிராமத்தில் தினகர் என்ற இளைஞர் விவசாய பணி செய்து வருகிறார். அவரது குடும்பம் காலம் காலமாக பனைத்தொழில் செய்து வருகின்றனர்.
வீட்டின் அருகில் 55 அடி உயரம் உள்ள பனைமரம் ஒன்றையும் பாதுகாத்து வருகின்றனர். இந்த நிலையில் தினகரின் தந்தையான ஏசுதாசன் (வயது 70) பனைத் தொழிலாளி ஆவர். எனினும், வயது மூப்பு காரணமாக பனை மரம் ஏறுவதை நிறுத்திவிட்டார்.
இந்த நிலையில் தனது தந்தையும், தானும் தொடர்ந்து பனை மரம் ஏற வேண்டும் என்று எண்ணியும், பனைத் தொழிலைக் காக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் வீட்டில் உள்ள படிக்கட்டுகள் போல் ரூ.60 ஆயிரம் செலவு செய்து 55 அடி உயரமுள்ள பனை மரத்தில் இரும்பு கம்பியால் வளைவு படிக்கட்டுகளை அமைத்துள்ளார்.
பனை மரத்தில் பொருத்தப்பட்டுள்ள படிக்கட்டுகள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எளிதில் பயன்படுத்தப்படக் கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.இது குறித்து விவசாயி தினகர் கூறுகையில், “தலைமுறை தலைமுறையாக பனைத்தொழிலை செய்து வருகிறோம். தற்போது பனைத் தொழில் அழிந்து வருகிறது. ஏனென்றால் பனை மரத்தில் ஏறுவதற்கு இப்பொழுது போதிய அளவில் ஆட்கள் இல்லை. இனி வரும் காலங்களில் இளைஞர்கள் எளிதாக பனை மரம் ஏறுவதற்காக இதுபோல் படிக்கட்டு அமைக்கும் சிந்தனை எனக்கு ஏற்பட்டது.
இந்த பனைமரத்தில் நல்ல வருமானம் வரும். ஒரு நாளிற்கு 20 லிட்டர் பதநீர் கிடைக்கிறது. அதில் 5 கிலோ கருப்பட்டி தயார் செய்யலாம். இதுபோல் நிறைய பனை மரங்களில் படிக்கட்டி அமைத்து பனை தொழில் செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும்; அத்துடன், பனைத் தொழிலை காக்கலாம்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பனை மரத்தில் பொருத்தப்பட்டுள்ள படிக்கட்டுகளை கிராம மக்கள் பலரும் நேரில் வந்து ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். அத்துடன், தினகருக்கும் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
