சென்னை, ஜூலை 7– வருவாய் ஆய்வாளர்கள் ஒப்புதல் இல்லாமல் சான்றிதழ்கள் வழங்க தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்து வருகிறது. மூன்று அடுக்கு நடைமுறையால், ஒரு சான்றிதழ் வழங்க பல நாட்கள் ஆகிறது.
இணையதளம் முறை
தமிழ்நாட்டில் ஜாதிச் சான்றிதழ், வருவாய்ச் சான்றிதழ். இருப்பிடச் சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு வருவாய்த்துறை ஆவணங்களை பெற பொதுமக்கள் இ-சேவை மய்யங்கள் அல்லது இணையதளம் மூலம் விண்ணப்பிக்கின்றனர். இந்த விண்ணப்பம் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று, அவர் கள ஆய்வு செய்து அறிக்கை அளிக்கிறார்.
பின்னர் அந்த கோப்பு வருவாய் ஆயவாளரிடம் அனுப்பப்படுகிறது. அவர் மீண்டும் சரிபார்த்து பரிந்துரை செய்த பிறகு தாசில்தாரிடம் செல்கிறது. தாசில்தார் இறுதி ஒப்புதல் அளித்த பின்னரே சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த பணிகள் இணையதளம் முறையிலேயே நடைபெறுகிறது. இந்த மூன்று அடுக்கு நடைமுறையால், ஒரு சான்றிதழ் வழங்க பல நாட்கள் ஆகிறது.
தமிழ்நாடு அரசு பரிசீலனை
இதனை தவிர்க்கும் வகையில், வி.ஏ.ஓ. ஆய்வு அறிக்கையை அடிப்படையாக கொண்டு நேரடியாக தாசில்தார் ஒப்புதல் அளிக்கும் முறையை அறிமுகப்படுத்த தமிழ்நாடு அரசு பரிசீலித்து வருகிறது. இந்த நடைமுறை அமலுக்கு வந்தால் சான்றிதழ் வழங்கும் காலம் கணிசமாக குறையும் என அதிகாரிகள் கருதுகின்றனர். கிராம நிர்வாக அலுவலர் ஆய்வுக்குப் பிறகு கோப்பு நேரடியாக தாசில்தாரிடம் செல்வதால் ஒரு நிர்வாக அடுக்கு குறையும்.
இதன் மூலம் பொதுமக்கள் சான்றிதழ்களை விரைவாக பெற முடியும். முதல்கட்டமாக சில சான்றிதழ்களுக்கு மட்டும் வருவாய் ஆய்வாளர் நிலை தேவையில்லை என்பது சோதனை அடிப்படையில் கொண்டுவர உள்ளதாக தெரிகிறது.
