சென்னை, ஜூன் 26 தமிழ்நாட்டில் ‘எல் நினோ’ தாக்கத்தால் தென்மேற்கு பருவமழை குறைய வாய்ப்புள்ளதால், விவசாயிகள் தங்களின் குறுவை பயிர்களை உடனடியாகக் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என்று வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம், நடப்பு குறுவை பருவத்தில் மாநிலத்தின் 37 மாவட்டங்களை உள்ள டக்கிய 14 தொகுப்புகளில் செயல் படுத்தப்படுகிறது. தற்போது தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கார், குறுவை, சொர்ணவாரி நெல் மற்றும் இதர பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை மொத்தம் 9 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை பருவ பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் சுமார் 6 லட்சம் ஏக்கரில் குறுவை நெற்பயிர் மட்டும் பயிரிடப்பட்டுள்ளது.
காப்பீடு செய்யப்பட்டுள்ள பயிர்கள்
தற்போது நிலவும் எல் நினோ நிகழ்வின் தாக்கத்தால் தென்மேற்கு பருவமழை இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் குறுவை மற்றும் மானாவாரி பயிர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், 2026 குறுவை பருவத்தில் பின்வரும் பயிர்கள் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன:
14 வேளாண் பயிர்கள்: நெல், மக்காச் சோளம், துவரை, உளுந்து, பச்சைப்பயறு, நிலக்கடலை, ராகி, சோளம், கம்பு, தட் டைப்பயறு, எள், பருத்தி, சாமை மற்றும் கொள்ளு.
12 தோட்டக்கலைப் பயிர்கள்: வாழை, மரவள்ளி, வெங்காயம், உருளைக்கிழங்கு, கேரட், கத்தரி, வெண்டை, மஞ்சள், தக்காளி, பூண்டு, இஞ்சி மற்றும் முட்டைக்கோஸ்.
பதிவு செய்வதற்கான கடைசி நாட்கள்
அறிவிக்கை செய்யப்பட்ட பயிர் களை தேசிய பயிர்க் காப்பீட்டு இணைய தளத்தில் விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ளலாம்.
ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்கள் குறுவை நெற்பயிருக்கு காப்பீடு செய்வதற்கான கடைசி நாள் ஜூலை 15 ஆகும். அறிவிக்கை செய்யப்பட்ட இதர மாவட்டங்களில் விவசாயிகள் ஜூலை 31 ஆம் தேதி வரை காப்பீடு செய்து கொள்ளலாம்.
காப்பீடு வழங்கப்படும் இழப்புகள்: மாவட்டங்களின் பரிந்துரைப்படி, பின்வரும் நிலைகளில் ஏற்படும் இழப்புகளுக்கு இத்திட்டத்தின் கீழ் காப்பீடு வழங்கப்படும்:
மகசூல் இழப்பு விதைப்பு/நடவு செய்ய இயலாத நிலை அல்லது பொய்த்தல்
பகுதி சார்ந்த மற்றும் பயிர் வளர்ச்சி கால இடர் நிகழ்வுகள் அறுவடைக்குப் பின் ஏற்படும் இழப்புகள்
பதிவு செய்யும் வழிமுறைகள்
கடன் பெறும் விவசாயிகள்: தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் காப்பீடு செய்து கொள்ளலாம்.
கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மய்யங்கள் (இ-சேவை மய்யங்கள்) அல்லது தேசிய பயிர்க் காப்பீட்டு இணையதளத்தில் (National Crop Insurance Portal) உள்ள “விவசாயிகள் கார்னர்” (Farmers Corner) வாயிலாக நேரடியாகப் பதிவு செய்யலாம்.காப்பீடு செய்வதற்கான இறுதிக்காலம் ஜூலை 31-ஆம் தேதி ஆகும். இக்காலக்கெடு எக்காரணத்திற்காகவும் நீட்டிக்கப்பட மாட்டாது என்பதால், விவசாயிகள் விரைந்து காப்பீடு செய்து கொள்ள வேண்டும். இ்வ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
