சென்னை, ஜூன் 25- அரசு திரைப்படக் கல்லூரியில் டிஜிட்டல் இன்டர்மீடியட், ஆடியோகிராபி ஆகிய இரு படிப்புகளுக்கு மட்டும் இணையதள விண்ணப்பப் பதிவு ஜூன் 27-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு நேற்று (24.6.2026) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
தமிழ்நாடு அரசின் எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம் சென்னை தரமணியில் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் ஒளிப்பதிவு, டிஜிட்டல் இன்டர்மீடியட், ஒலிப்பதிவு, இயக்கம் மற்றும் திரைக்கதை எழுதுதல், எடிட்டிங், அனிமேசன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் ஆகிய 6 பாடங்களில் இளங்கலை பட்டப்படிப்பு (பேச்சிலர் ஆஃப் விஷுவல் ஆர்ட்ஸ்) வழங்கப்படுகிறது.
நடப்புக் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு ஜூன் 21-ஆம் தேதி முடிவடைந்தது. இந்நிலையில், டிஜிட்டல் இன்டர்மீடியட், ஒலிப்பதிவு (ஆடியோகிராபி) ஆகிய இரண்டு பாடப்பிரிவுகளுக்கு மட்டும் நிர்வாக காரணங்களுக்காக, இணையதள விண்ணப்பப் பதிவு ஜூன் 27-ஆம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்படுகிறது.
எனவே, மேற்கண்ட பாடப்பிரிவுகளில் சேர விரும்பும் மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கடவுச்சீட்டு குடியுரிமைக்கான ஆதாரம் அல்ல!
வெளியுறவு அமைச்சகம்
புதுடில்லி, ஜூன் 25 கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) ஒரு பயண ஆவணம் மட்டுமே என்றும், அது குடியுரிமைக்கான ஆதாரம் அல்ல எனவும் வெளியுறவு அமைச்சகம் (MEA) தெரிவித்துள்ளது. 14-ஆவது ‘கடவுச்சீட்டு சேவை நாள்’ கொண்டாடப்படும் நிலையில், அமைச்சகத்தின் இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே குடியுரிமை சான்று குறித்த பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. முன்னதாக ஆதார் அட்டையும் குடியுரிமையை நிரூபிக்கும் ஆவணம் அல்ல என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
