
சென்னை, ஜூன்.19- தென்மேற்கு பருவமழை நாட்டின் பல பகுதிகளில் மந்தமாக இருக்கும் நிலையில், மேற்கு காற்றழுத்த சுழற்சிகள் காரணமாக வடமேற்கு இந்தியாவில் எதிர்பாராத அளவில் கனமழை பெய்து வருகிறது. இந்த பருவத்தில் இதுவரை வடமேற்கு இந்தியாவில் இயல்பை விட 5 சதவீதம் அதிக மழை பதிவாகியுள்ளது.
குறிப்பாக கிழக்கு ராஜஸ்தானில் 80 சதவீதமும், மேற்கு ராஜஸ்தானில் 20 சதவீதமும் கூடுதல் மழை பெய்துள்ளது. இதற்கு மாறாக, நாட்டின் பிற பகுதிகளில் மழைப் பற்றாக்குறை நீடிக்கிறது. குஜராத், மத்திய பிரதேசம், மராட்டியம் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய மத்திய இந்தியாவில் 61 சதவீதம் மழைப் பற்றாக்குறை பதிவாகியுள்ளது. கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் 43 சதவீதமும், தென் இந்திய தீபகற்பப் பகுதிகளில் 14 சதவீதமும் மழைப் பற்றாக்குறை நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. கடந்த 1 முதல் 17-ஆம் தேதி வரை பெறப்பட்ட மழை விபரங்களின்படி, நாட்டின் சுமார் மூன்றில் இரண்டு பங்கு மாவட்டங்கள் மழைப் பற்றாக்குறையை சந்தித்துள்ளன. 738 மாவட்டங்களில் 32 சதவீத மாவட்டங்கள் மழைப் பற்றாக்குறையிலும், 31 சதவீத மாவட்டங்கள் கடுமையான மழைப் பற்றாக்குறையிலும் உள்ளன. தமிழ்நாட்டில் இதுவரை இயல்பை விட 37 சதவீதம் குறைவான மழை பதிவாகியுள்ளது. கேரளாவில் 13 சதவீதமும், கருநாடகாவில் 27 சதவீதமும் மழைப் பற்றாக்குறை உள்ளது. பருவமழை நாட்டின் பல பகுதிகளில் இன்னும் முழு வேகத்தை எட்டாத நிலையில், வடமேற்கு இந்தியாவில் மட்டும் மேற்கு காற்றழுத்த சுழற்சிகள் காரணமாக மழை சாதகமாக அமைந்துள்ளதாக வானிலை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
