சென்னை, ஜூன் 18 தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடர் இன்று (18.6.2026) காலை 10 மணியளவில் கூடியது. இக்கூட்டத்திற்கு சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் தலைமையில், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் ‘வாய் திறங்க CM’’ என்ற வாசகம் இடம்பெற்ற கருப்புப் பேட்ஜ் அணிந்தும் பங்கேற்றனர். முன்னதாக சட்டமன்ற வளாகத்திற்கு வெளியே, கைகளில் பல்வேறு வாசகங்கள் இடம்பெற்ற பதாகைகளுடன் வந்த னர். தவெக அரசின் ஒரு மாத கால ஆட்சியின் போக்கை எடுத்துரைக்கும் வகையில் ‘திரையில் நாயகன்; தரையில் வில்லன்..’, ‘கதறல் கேட்குதா சி.எம்,’, ‘வாயில் ஏதாவது வருமா சி.எம்?’ என்ற வாசகங்கள் பொறித்த பதாகைகளுடன் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள், தவெக அரசு மற்றும் முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு எதி ராக முழக்கங்களை எழுப்பினர்.
மேலும் முதலமைச்சர் விஜய்யின் வாசகமான தூய சக்தி என்பதை விமர்சிக்கும் வகையில் தூய சக்தி அல்ல, துயர சக்தி என்ற வாசகம் பொறிக்கப்பட்ட பதாகைகளையும் ஏந்தி திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.
இவை தவிர, ‘சிறு பெண்கள் இங்கே! சிங்கப் பெண்கள் எங்கே?’, ‘ரீல்ஸ் இங்கே.. ரியல் எங்கே?’, ‘மாஸ்டர் வாயில் பிளாஸ்டர்..’, ‘திரையில் HERO இல்ல.. தரையில் ZERO’, ‘தூய சக்தி அல்ல துயர சக்தி’ உள்ளிட்ட வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளையும் கைகளில் வைத்து கொண்டு முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு எதிராக தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.
