வேலூர், மே 31- வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 136-ஆவது பிறந்தநாள் மற்றும் மே-1,தொழிலாளர் தினம் முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு இலவச கோடைக்கால ஓவியப் பயிற்சி முகாம் தொடங்கப்பட்டது.
ஒரு மாதம் நடைபெற்ற இந்த பயிற்சி வகுப்பு 30-05-2026 அன்று நிறைவு பெற்றதை ஒட்டி மாணவர்களுக்கு பயிற்சி சான்றிதழ் மற்றும் ஓவியம் வண்ணம் தீட்டும் உபகரணங்கள் வழங்கும் நிறைவு விழா வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் மருத்துவர் பழ.ஜெகன்பாபு தலைமை உரையுடன் குடியேற்றம் புவனேசுவரிப்பேட்டை பெரியார் அரங்கில் மாலை 5 மணி அளவில் நடைபெற்றது.
வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் பி.தனபால் அனைவரையும் வரவேற்று பேசினார். குடியேற்றம் நகர பகுத்தறிவாளர் கழக தலைவர் ப.ஜீவானந்தம் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். மேனாள் மாவட்ட கழக செயலாளர் கு. இளங்கோவன், பொதுக்குழு உறுப்பினர் சி.லதா,பகுத்தறிவாளர் கழக பற்றாளர் வெ.ரா.நபீஸ்அகமத், மாவட்ட மகளிர் அணி தலைவர் இரா.ராஜகுமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். குடியேற்றம் நகர கழகத் தலைவர் சி.சாந்தகுமார் இந்நிகழ்வில் புரட்சி பாடல்களை பாடினார்.
வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் முனைவர் வே.வினாயகமூர்த்தி கோடைக்கால ஓவியப் பயிற்சி முகாம் செயல்பாடுகள் குறித்து தொடக்க உரையில் பேசினார். மாநில மகளிர் அணி துனைச் செயலாளர் ந.தேன்மொழி, மாவட்ட கழக தலைவர் வி.இ.சிவக்குமார், குடியேற்றம் தமிழியக்கம் செயலாளர் ஜெ.தமிழ்ச்செல்வன் ஆகியோர் பயிற்சிப் பெற்ற மாணவர்களையும், சிறப்பாக பயிற்சி அளித்த ஓவிய ஆசிரியர் ஜி.மெய்யழகனையும் பாராட்டி வாழ்த்துரை வழங்கினர்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் இர.அன்பரசன் தமது சிறப்புரையில், வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் மிகச்சிறப்பாக திட்டமிட்டு கடந்த ஒரு மாத காலமாக பள்ளி மாணவர்களுக்கு இந்த பயிற்சி முகாமை வெற்றிகரமாக நடத்தி முடித்தனர். இந்த முகாம் நடத்துவதன் நோக்கம் பள்ளி மாணவர்கள் கல்வியில் கூடுதல் அறிவாற்றல் பெற வேண்டும் என்பதே ஆகும்.பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் மூடநம்பிக்கை குறித்து புராணக் கதைகளும், அறிவியலுக்கு புறம்பான கருத்துக்களையும் தெரிவிக்கக் கூடாது. பகுத்தறிவு சிந்தனை உள்ள கருத்துக்களையும்,எதையும் அறிவியல் துணைக்கொண்டு ஆராயும் மனநிலையும் இளைய தலைமுறையிடம் உருவாக்குவது நம் ஒவ்வொருவரின் கடமை என்று குறிப்பிட்டு பேசினார். இந்த முகாமில் 50 மாணவர்கள் ஓவியப் பயிற்சி பெற்றார்கள்.
இவர்களுக்கு பயிற்சி சான்றிதழ் மற்றும் ஓவியம் வரையும் உபகரணங்கள் வழங்கப்பட்டது. மேலும்,பயிற்சி முடித்த மாணவர்களுக்கு ஓவியப் போட்டி நடத்தப்பட்டு சிறப்பாக ஓவியம் வரைந்த முதல் மூன்று மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு சதுரங்க பெட்டகத்தை பரிசாக வழங்கப்பட்டது.இந்த விழாவில் பெற்றோர்கள், கழக நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று சிறப்பித்தார்கள்.
வாழ்த்து
வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் முனைவர் வே.வினாயகமூர்த்தியின் 48ஆவது பிறந்தநாளையெட்டி 30-05-2026 அன்று கழக நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள், பெற்றோர்கள் மாணவர்கள் அனைவரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தார்கள். இறுதியாக வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைச் செயலாளர் க.பரமசிவம் நன்றி உரை கூறினார்.
