புதுடில்லி, மே 23 நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, புதிய கல்வி அமர்வு முதல் ‘மும்மொழி வழிக்கொள்கை’ கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு மன உளைச்சல்: வரும் ஜூலை 1 முதல் அமலுக்கு வரவுள்ள இந்த மும்மொழிக் கொள்கை விதியால், 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் மத்தியில் மிகப்பெரிய குழப்பமும் மன உளைச்சலும் ஏற்படும். 3-ஆவது மொழியைக் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற விதியை ஏற்க முடியாது.
கூடுதல் கல்விச் சுமை: 9-ஆம் வகுப்பில் திடீரென மேலும் இரண்டு கூடுதல் மொழிகளைக் கட்டாய மாகப் படிக்க வேண்டும் என்று சிபிஎஸ்இ கூறுவது, மாணவர்களின் கல்விச் சுமையை அநியாயமாக அதிகரிக்கும் செயலாகும்.
பதற்றமான சூழல்: ஒன்பதாம் வகுப்பில் சேரும் மாணவர்கள், அடுத்த ஆண்டே தங்களின் முக்கிய மைல்கல்லான 10-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இத்தகைய சூழலில், திடீரென கூடுதல் மொழிகளைப் படிக்கக் கட்டாயப்படுத்துவது கல்விச் சூழலில் மிகப்பெரிய குழப்பத்தையும் பதற்றத்தையும் உருவாக்கும். மாணவர்களின் எதிர்காலம் சார்ந்த இந்த விவகாரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், இந்த மனுவை உடனடியாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரப்பட்டது. இதுகுறித்த முறையீட்டை மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகி உச்ச நீதிமன்றத்தில் முன்வைத்தார். இதனைப் பரிசீலனை செய்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, சிபிஎஸ்இயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான இந்த மனுவை அவசர வழக்காக ஏற்றுக் கொண்டு, அடுத்த வாரம் பட்டிய லிட்டு விசாரணை நடத்துவதாக உத்தரவிட்டுள்ளது.
