சென்னை, மே 14- ‘கட்சிக் கட்டுப் பாட்டை மீறி, த.வெ.க., அரசுக்கு ஆதரவு தெரிவித்த, அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, பேரவைத் தலைவரிடம், இபிஎஸ் தரப்பு புகார் அளித்துள்ளது.
தமிழ்நாடு சட்டப் பேரவையில், த.வெ.க., அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பின்போது, அ.தி.மு.க.,வின் எஸ்.பி.வேலுமணி தரப்பு சட்டமன்ற உறுப்பினர்கள், 25 பேர், த.வெ.க.,வுக்கு ஆதரவாக ஓட்டளித்தனர். அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க., பொதுச் செயலாளர் இபிஎஸ் தரப்பில், அக்கட்சி நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் இன்பதுரை, முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் ஆகியோர், தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர் அலுவலகத்தில், கட்சி கட்டுப்பாட்டை மீறி, த.வெ.க.,வுக்கு ஆதரவாக ஓட்டளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, மனு அளித்தனர்.
இதுகுறித்து, அவர்கள் அளித்த பேட்டி: தமிழ்நாடு சட்டப்பேரவையில், த.வெ.க., அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது, அ.தி.மு.க., சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி கட்டுப்பாட்டை மீறி, அரசுக்கு ஆதரவாக ஓட்டளித்துள்ளனர். அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இபிஎஸ், இது குறித்து சட்டப்பேரவையில் புகார் தெரிவித்தார். ஆசை வார்த்தை கூறி, அதன் வழியே ஆதாயம் தேடும் முயற்சி நடக்கிறது என தெரிவித்தார். ஆனால், பேரவைத் தலைவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
கட்சி கட்டுப்பாட்டை மீறி ஓட்டளித்தது, சட்டப்பேரவை ஓட்டெடுப்பு விதிகளின்படி, சட்டத்துக்கு எதிரானது. கொறடா உத்தரவை மீறியதால், கட்சி தாவல் சட்டம் இதில் வருகிறது. அதன் காரணமாக, பேரவைத் தலைவரிடம் புகார் அளிக்க சென்றோம். அவர் இல்லாததால், அவரின் செயலாளரிடம், புகார் அளித்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
