புதுடில்லி, மே 7 அசாம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய அய்ந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களிலும் ஒரு முஸ்லிம் வேட்பாளர்களைக்கூட நிறுத்த வில்லை பாரதிய ஜனதா கட்சி.
அண்மையில் நடந்து முடிந்த அசாம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களில் மொத்தம் 723 சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இதில் 104 பேர் (சுமார் 14.36%) முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், நாட்டின் மிகப்பெரிய கட்சியான பா.ஜ.க. சார்பில் ஒரு முஸ்லிம் வேட்பாளர் கூட நிறுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மே.வங்கத்தில் 40
மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 293 இடங்களில் 38 முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வாகியுள்ளனர். இதில் திரிணாமூல் காங்கிரசில் இருந்து 34, காங்கிரசில் இருந்து 2, இந்திய மதச்சார்பற்ற முன்னணி 1, சிபிஎம் 1 ஆகியோர் வெற்றி பெற்ற இஸ்லாமியர் ஆவர். அம்மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சியைப் பிடித்தாலும், அக்கட்சியில் முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் இல்லை. கேரளத் தேர்தலில் மொத்தம் 35 முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளனர். முஸ்லிம் லீக்கில் இருந்து 22, காங்கிரஸில் 8 பேர் வென்றுள்ளனர்.
அசாமில் 22
2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சுமார் 34 சதவிகிதம் முஸ்லிம் மக்கள் தொகையைக் கொண்ட அசாம் மாநிலத்தில், மொத்தமுள்ள 126 இடங்களில் 22 முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வாகியுள்ளனர். இவர்களில் 18 பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் ரைஜோர் தள்-1, திரிணாமூல்-1 மற்றும் அகில இந்திய அய்க்கிய ஜனநாயக முன்னணி-2 பேர்.
2023 ஆம் ஆண்டில் அம்மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுவரையறைப் பணியில் முஸ்லிம் பெரும்பான்மைத் தொகுதிகளின் எண்ணிக்கை
35-லிருந்து 22 ஆகக் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற உறுப்பினர்களில் 7 பேர் முஸ்லிம்கள். அதில் தி.மு.க – 3, முஸ்லிம் லீக் – 2, காங்கிரஸ் – 1, த.வெ.க – 1 என்ற அளவில் வென்றுள்ளனர். புதுச்சேரியில் ஒரு முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர் கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை.
பா.ஜ.க.வின் நிலைப்பாடு
பா.ஜ.க. எங்குமே ஒரு முஸ்லிம் வேட்பா ளரைக் கூட நிறுத்தவில்லை. ஜனநாயகத்தில் அனைத்து சமூகத்தினருக்கும் உரிய பிரதி நிதித்துவம் கிடைப்பது அவசியம். ஆனால், அண்மைக் காலமாக பா.ஜ.க.வின் மதவாத அரசியல் காரணமாக முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது மக்கள் பிரதி நிதித்துவ அரசியலில் ஒரு கவலையை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
2024 மக்களவைத் தேர்தலிலும் கூட பா.ஜ.க சார்பில் ஒரு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
