சென்னை, மே 6- மயிலாப்பூரைச் சேர்ந்த 10 வயது சிறுமி, கடந்த சில நாள்களுக்கு முன் வடசென்னை ஆர்.கே.நகர் தொகுதி காசிமேடு சிங்காரவேலன் நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார்.
தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற ஏப்ரல் 23ஆம் தேதி, அதே பகுதியைச் சேர்ந்த ‘பாம்பு தினேஷ்’ என்ற தினேஷ், விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதை வெளியே சொன்னால் கொன்றுவிடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.
மயிலாப்பூரில் உள்ள தன் வீட்டுக்குத் திரும்பிய சிறுமி, நடந்ததை சித்தியிடம் கூறியுள்ளார். தகவல் அறிந்த பெற்றோர், மே 3ஆம் தேதி காசிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போக்சோ வழக்கு என்பதால், காசிமேடு காவல் துறையினர் வழக்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றினர். மே 4ஆம் தேதி தினேஷை கைது செய்ய முயன்றபோது, அவர் ஆர்.கே.நகரில் தவெக வேட்பாளர் மரிய வில்சனுக்கு ஆதரவாக வாக்கு எண்ணும் மய்யத்தில் இருந்ததால் கைது செய்ய முடியவில்லை. பின்னர் நேற்று (5.5.52026) இரவு காவல் துறையினர் தினேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கைதான தினேஷ், 43ஆவது வார்டு தமிழக வெற்றிக் கழக வட்டச் செயலாளராக உள்ளார். ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள மரிய வில்சனுடன் இணைந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
