தெஹ்ரான் / ஜகார்த்தா, மே 4- அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடைகளையும், கடற்படை முற்றுகையையும் மீறி, ஈரானின் பிரம்மாண்டமான ‘சூப்பர்-டேங்கர்’ கப்பல் வெற்றிகரமாக பன்னாட்டு கடற்பரப்பைக் கடந்துள்ளது. சுமார் 1.9 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயைச் சுமந்து கொண்டு, ஹார்மூஸ் நீரிணையை (Strait of Hormuz) இந்தக் கப்பல் கடந்தது. அமெரிக்கக் கண்காணிப்பில் இருந்து தப்பிக்க, இந்தக் கப்பல் தனது இருப்பிடத்தைப் பன்னாட்டு உலகிற்குத் தெரிவிக்கும் சிக்னல்களை (Transponders) முழுமையாக அணைத்துவிட்டு மிக ரகசியமாகப் பயணித்துள்ளது.
மிக நீண்ட தூரப் பயணத்திற்குப் பிறகு, தற்போது இந்தக் கப்பல் இந்தோனேசியா அருகே வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை அமெரிக்காவின் தடையை முறியடித்து சுமார் 52 ஈரானியக் கப்பல்கள் வெற்றிகரமாகத் தனது இலக்கை அடைந்துள்ளதாக ஈரானிய ஊடகங்கள் பெருமையுடன் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கப்பட்டிருந்தாலும், இதுபோன்ற ரகசியப் பயணங்கள் மூலம் ஈரான் தனது வர்த்தகத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து வருவது பன்னாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போர் நிறுத்தத்திற்கு இடையிலும்
லெபனான் மீது இஸ்ரேல் குண்டுவீச்சு
லெபனான் மீது இஸ்ரேல் குண்டுவீச்சு
2 பேர் உயிரிழப்பு 50க்கும் மேற்பட்டோர் படுகாயம்
பெய்ரூட், மே 4- இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே கடந்த மாதம் 17ஆம் தேதி முதல் போர் நிறுத்தம் அமலில் இருக்கிறது. எனினும் இஸ்ரேல் ராணுவமும், லெபனானின் ஹிஸ்புல்லாவும் தங்களது தாக்குதல்களை தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில் நேற்று (3.5.2026) தெற்கு லெபனானில் உள்ள 9 கிராம மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் புதிய எச்சரிக்கை விடுத்து இருந்தது.
இந்நிலையில் இஸ்ரேல் நேற்று (3.5.2026) வான்வழித் தாக்குதல் நடத்தியது. கஃபார் தஜால் கிராமத்தில் கார் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குலில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். லுவைசே கிராமத்தில் வீடு சேதமடைந்ததில் மூன்று பேர் உயிரிழந்தனர். ஷவ்கின் கிராமத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
இது குறித்து இஸ்ரேல் ராணுவத்தின் அரபு மொழி செய்தித் தொடர்பாளரான லெப்டினன்ட் கர்னல் தனது எக்ஸ் தள பதிவில்,‘‘இஸ்ரேல் விமானப்படை சுமார் 50 வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. அவை ஹிஸ்புல்லாவின் உள்கட்டமைப்பு மற்றும் உறுப்பினர்களை குறிவைத்து நடத்தப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.
