திருவனந்தபுரம், மே 3- வணிக எரிவாயு உருளை விலை ரூ.993 உயர்த்தப்பட்டது வணிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும், இதன்மூலம் உணவுப் பொருட்களின் விலை உயரும் என்றும் வணிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கேரளாவில் வணிக எரிவாயு உருளை விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து 6ஆம் தேதி ஓட்டல்கள் மற்றும் உணவகங்களை மூடப்போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தொடர்பாக ஓட்டல்கள் மற்றும் உணவகங்கள் உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் ராஜு அப்சரா கூறியிருப்பதாவது:-
19 கிலோ வர்த்தக எரிவாயு உருளையின் விலை ரூ.3 ஆயிரத்து 85 ஆக உயர்ந்து இருப்பது உணவகம் மற்றும் கேட்டரிங் துறைக்கு பெரும் சுமையாக அமைந்துள்ளது. அதிகரித்து வரும் பல்வேறு செலவுகளால் தாங்கள் ஏற்கெனவே போராடி வரும் நிலையில் திடீரென ஏற்பட்ட எரிவாயு உருளை விலை உயர்வு நிலைமையை மேலும் மோசமாக்கி உள்ளது.
