சென்னை, மே 2- அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஏப்ரல் மாத தொகுப்பூதியம் வழங்க ரூ.18.26 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 183 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரை யாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அண்மையில் இவர்களுக்கு ஒருங்கிணைந்த ஊதிய அடிப்படையில் ரூ.30 ஆயிரமாக ஊதியம் உயர்த்தப்பட்டது. ஒவ்வொரு கல்வியாண்டிலும் விரிவுரையாளர்களுக்கான ஏப்ரல் மாத ஊதியம் சற்று தாமதமாக வழங்கப்பட்டு வந்த நிலையில் முதல் முறையாக ஏப்ரல் மாத ஊதியம் மே 5 தேதிக்குள் வழங்கப்படவுள்ளது. அதற்காக தமிழ்நாடு அரசு ரூ.18.26 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து கல்லூரி கல்வி இயக்ககத்தின் நிதி ஆலோசகர் மற்றும் தலைமை கணக்கு அலுவலர் அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னையில் இயங்கும் நந்தனம் அரசு கலைக்கல்லூரி, மாநில கல்லூரி, ராதா கிருஷ்ணன் நகர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அம்பேத்கர் அரசு கலைக்கல்லூரி உள்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள 183 கல்லூரிகளில் பணியாற்றக்கூடிய சுழற்சி – 1 மற்றும் சுழற்சி – 2 கவுரவ விரிவுரையாளர் களுக்கான ஏப்ரல் மாத தொகுப்பூதியம் அளிக்கும் விதமாக ரூ.18.26 கோடி அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. எனவே, எந்த வித தாமதமுமின்றி மே 5ஆம் தேதிக்குள் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.
