புதுடில்லி, ஏப்.25 பிரதமர் மோடி குறித்து கார்கே கருத்துக்கு விளக்கம் அளிக்க 24 மணி நேரக்கெடு விதித்த தேர்தல் ஆணைய உத்தரவு முழக்க உள்நோக்கம் கொண்டது என்று காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தமிழ்நாடு வந்த மல்லிகார்ஜுன கார்கே கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ‘அண்ணாவின் ஒளிப்படத்தை வைத்துள்ள அதிமுகவினர், எப்படி மோடியுடன் சேர முடிகிறது? மோடி ஒரு பயங்கரவாதி. அவரது கட்சி சமுத்துவத்தையும் நீதியையும் நம்பாது. அதிமுகவினர் அவர்களுடன் சேர்கிறார்கள் என்றால் அவர்கள் ஜனநாயகத்தை பலவீனப்படுத்துகிறார்கள் என்று அர்த்தம். அண்ணா, காமராஜர், பெரியார், கலைஞர், பாபாசாகேப் அம்பேத்கர் ஆகியோரின் தத்துவத்தை பலவீனப்படுத்துகிறார்கள் என்று அர்த்தம்’ என்று கூறினார்.
காங்கிரஸ் கண்டனம்
மோடி ஒரு பயங்கரவாதி என்று கார்கே கூறினார் என்று பா.ஜ.கவினர் கடும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். இது குறித்து பா.ஜ.கவின் மூத்த அமைச்சர்களான நிர்மலா சீதாராமன், கிரண் ரிஜிஜூ, அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தனர். தேர்தல் நேரத்தில் பிரதமரை பயங்கரவாதி போல் சித்தரித்து தேர்தல் நடத்தை விதிகளை மல்லிகார்ஜுன கார்கே மீறியுள்ளதாக அந்த புகாரில் தெரிவித்திருந்தனர். இதனிடையே தனது பேச்சுக்கு விளக்கம் அளித்த மல்லிகார்ஜுன கார்கே, மோடியை தனிப்பட்ட முறையில் பயங்கரவாதி என அழைக்கவில்லை என்றும், ஒன்றிய புலனாய்வு அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சிகளை மோடி பயங்கரவாத அச்சுறுத்தலை அளிக்கிறார் என்று தான் கூறினேன் என்றும் கூறினார்.
இருப்பினும்,மல்லிகார்ஜுன கார்கேவின் பேச்சு தேர்தல் நடத்தை விதி மீறல் எனக் கூறி இது குறித்து அவர் 24 மணி நேரத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கார்கேவுக்கு 22-04-26 என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ், இது முழுக்க உள்நோக்கம் கொண்டது என சாடியுள்ளது. மேலும், கார்கே பரப்புரையில் ஈடுபட்டுள்ளபோது 24 மணி நேர கெடுவுக்குள் விளக்கம் கோரியதை ஏற்க முடியாது எனவும் இதற்கு விரிவாக விளக்கம் அளிப்பதற்கு 1 வார கால அவகாசம் வேண்டும் எனவும் கூறியுள்ளது.
