புதுச்சேரி, ஏப்.8- புதுவை மரப்பாலம் சந்திப்பு மற்றும் அண்ணா சாலை அருகே திமுக வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி நேற்று (7.4.2026) தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது: புதுவை மக்கள் வெறுப்பு அரசியலுக்கு இடம் தர மாட்டார்கள். அப்படிப்பட்ட புதுவையில் பாசிச பாஜக சக்தி களின் ஊடுருவல் அதிகமாகி விட்டது.
‘புதுவை மண் சுயமரியாதை மண்’ என்பதை இந்த முறை நிரூபித்து காட்ட வேண்டும். மாநில அரசும், ஒன்றிய அரசும் ஒன்றாக கூட்டணியாக இருந்தால் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.
இரட்டை இன்ஜின் ஆட்சி
பிரதமர் மோடி கூறுகின்ற ‘இரட்டை இன்ஜின்’ ஆட்சியால் புதுவைக்கு ஏதாவது வளர்ச்சி திட்டம் வந்துள்ளதா? உரிமைகள் கிடைத்துள்ளதா? ‘திராவிட இன்ஜின்’ என்ற சிங்கிள் இன்ஜின் மூலமாக இரட்டை இலக்க வளர்ச்சியைத் தமிழ்நாட்டில் ஸ்டாலின் கொடுத்துள்ளார்.
புதுவை மக்கள் மீது ஒன்றிய அரசுக்கு அக்கறை இருந்திருந்தால், மக்களின் கோரிக்கையான மாநிலத் தகுதியை வழங்கியிருக்க வேண்டும். 16 முறை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும் மாநிலத் தகுதியை வழங்கவில்லை. அதை வழங்க பிரதமர் மோடிக்கு மனதில்லை.
ஆளுநரை வைத்தே புதுவையை ஆளலாம் என பாஜக நினைக்கிறது. மாநிலத் தகுதி கிடைத்தால் ஆளுநருக்கு அதிகாரம் இல்லாமல் போய்விடும்.
புதுவை பல்கலைக்கழகத்தில் மாநில மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு கேட்டு வருகிறோம். அதை தர ஒன்றிய அரசு மறுக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. பொதுப்பணித்துறையில் ஊழல், லேப்டாப் ஊழல், ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டங்களில் ஊழல் நடந்துள்ளது. அனைத்து துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை விரட்டியடிக்கப் போவது போல புதுவையிலும் அந்த கூட்டணியை விரட்டியடிக்கும் நேரம் தான் இந்தத் தேர்தல். தமிழ்நாடு மட்டுமல்ல. புதுவையிலும் மிகப்பெரிய வெற்றியை அளித்து சாதனை படைக்க வேண்டும்.
இவ்வாறு உதயநிதி பேசினார்.

