புதுடில்லி, ஏப்.2 ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் ஒரே தலைநகராக அமராவதியை அங்கீகரிக்கும் வகையில், ஒன்றிய அரசு கொண்டு வந்த ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்பு திருத்த மசோதா மக்களவையில் நேற்று (1.4.2026) குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து தெலங்கானா மாநிலம் பிரிக் கப்பட்டபோது, ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டத்தின்படி, அய்தராபாத் நகரம் 10 ஆண்டுகளுக்கு இரு மாநிலங்களுக்கும் பொதுத் தலைநகராக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த 10 ஆண்டுகள் காலம் முடிந்த பிறகு, அய்தராபாத் தெலங்கானா மாநிலத்தின் தலைநகராகத் தொடரும் என்று முடிவானது. இதனைத் தொடர்ந்து, ஆந்திர மாநிலத்திற்கென புதிய தலைநகரை உருவாக்கும் பணியில் அப்போதைய முதலமைச்சர் சந்திரபாபு ஈடுபட்டு, அமராவதியைத் தலைநகராகத் தேர்வு செய்தார்.
இதற்கிடையில், 2019-இல் பதவியேற்ற ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் அமரா வதியைச் சட்டப்பேரவைத் தலைநகராகவும், கர்நூலை நீதித்துறைத் தலைநகராகவும், விசாகப்பட்டினத்தை நிர்வாகத் தலைநகராகவும் கொண்ட ‘மூன்று தலைநகரங்கள்’ திட்டத்தைக் கொண்டு வந்தார். எனினும், பெரும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் 2021-ஆம் ஆண்டு இந்தத் திட்டம் திரும்பப் பெறப்பட்டது.
தற்போது மீண்டும் முதல மைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சந்திரபாபு தலைமையிலான அரசு, அமராவதியை ஆந்திரத்தின் ஒரே தலைநகராக உறுதிப்படுத்தவும், அதற்கு ஒன்றிய அரசின் மூலம் சட்டப்பூர்வ பாதுகாப்பு வழங்கவும் வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றியது.
மக்களவையில்
மசோதா நிறைவேற்றம்
இதனைத் தொடர்ந்து, ஒன்றிய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் மக்களவையில் இந்தத் திருத்த மசோதாவைத் தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். இருப்பினும், குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவின் நிறைவேற்றம், ஆந்திரத்தின் தலைநகர் தொடர் பான நீண்டகாலக் குழப்பங் களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, அமராவதியின் வளர்ச்சியைத் துரிதப்படுத்தும் என எதிர்பார்க்கப் படுகிறது.
