புவனேஷ்வர், மார்ச் 31 ஒடிசா முன்னாள் முதலமைச்சரும், பிஜூ ஜனதா தளத்தின் நிறுவனருமான மறைந்த பிஜூ பட்நாயக் குறித்து பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபே தெரிவித்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பிஜூ பட்நாயக்கின் மகனும், முன்னாள் முதலமைச்சருமான நவீன் பட்நாயக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சர்ச்சையின் பின்னணிக் காரணம்– –- பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபே சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், 1960-களில் நடைபெற்ற இந்திய – சீனப் போரின்போது, அமெரிக்க உளவு அமைப்பான சிஅய்ஏ (CIA) மற்றும் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆகியோருக்கு இடையே பிஜூ பட்நாயக் ஒரு பாலமாகச் செயல்பட்டார் எனக் குற்றம்சாட்டியிருந்தார். தேச நலனுக்கு எதிரான விதத்தில் அவர் செயல்பட்டதாக மறைமுகமாகச் சுட்டிக்காட்டிய துபேயின் இந்த அறிக்கை ஒடிசாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
துபேயின் இந்தக் குற்றச்சாட் டுக்குத் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிலளித்துள்ள நவீன் பட்நாயக், தனது தந்தையின் மீதான அவ தூறுக்குக் கடும் எதிர்ப்புத் தெரி வித்தார். இது குறித்து அவர் கூறியதாவது: “பிஜூ பட்நாயக் பற்றி நிஷிகாந்த் துபே கூறிய கருத்துகளைக் கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். சீனப் போர் நடந்தபோது எனக்கு 13 வயது. அந்தப் போரைத் தடுப்பதற்காகவும், தேசத்தின் பாதுகாப்பிற்காகவும் பிஜூ பட்நாயக் எவ்வளவு முயற்சிகளை மேற்கொண்டார் என்பதை நான் அறிவேன்.”
மேலும், துபேயின் கருத்தை வன்மையாகச் சாடிய அவர், “இப்படி யெல்லாம் அடிப்படை ஆதாரமற்ற அவதூறுகளைப் பரப்பும் நிஷிகாந்த் துபே உடனடியாக ஒரு மனநல மருத்துவரைச் சந்தித்துச் சிகிச்சை பெற வேண்டும்” எனத் காரசாரமாக விமர்சித்துள்ளார். மறைந்த பிஜூ பட்நாயக் ஒரு சிறந்த விமானி மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் என்பதையும் தாண்டி, ஒடிசாவின் அடையாளமாகப் போற்றப்படுபவர். அவர் மீது சுமத்தப்பட்ட இந்தக் குற்றச்சாட்டு ஒடிசா மக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் கூறி பிஜூ ஜனதா தளத்தினர் மாநிலம் தழுவிய போராட்டங்களில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளனர்.
