எங்கள் மகனின் 5ஆவது பிறந்தநாள் மார்ச் 10,2026!
அன்னை மணியம்மையார் அவர்களின் 107-ஆவது பிறந்த நாளை நினைவுகூரும் இந்த கால கட்டத்தில், எங்கள் குடும்பத்திற்கும் ஒர் இனிய தருணம்.
மகன் சு.க.செழியன் சித்தார்த்தன் 5-ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு, மனைவி, மகள் சிற்பா மணியம்மையுடன் குடும்பமாகச் சென்ற அந்த நேரத்தில், திட்டமிடப்படாத ஒரு சந்திப்பு எங்களுக்கு கிடைத்தது. அந்த சந்திப்பில் ஓர் இயக்க வரலாற்றின் உயிரோடு பேசும் தருணம்.
திராவிட இயக்கம் என்பது ஓர் அரசியல் பயணம் மட்டுமல்ல. அது பல நூற்றாண்டுகள் குரலற்ற வர்களுக்கு குரல் கொடுக்க நடந்த சிந்தனைப் புரட்சி. அந்தப் புரட்சியின் விதையை விதைத்தவர் தந்தைபெரியார். அதை அரசியல் சக்தியாக மாற்றி அதிகாரப் பகிர்வை சாமானியர்களுக்குச் சமைத்தவர் பேரறிஞர் அண்ணா. அதை மக்கள் வாழ்வின் ஆழத்தில் பதித்தவர் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் – அந்தப் பாதையை இன்றைய ஆட்சி யிலும் சமூக நீதியிலும் தொடர்கிறார் நம் திராவிட நாயகர் மு.க. ஸ்டாலின்.
திராவிடப் பெரும் மரபின் காவலராக, முக்கால் நூற்றாண்டுக்கும் மேலாக திராவிடக் கொள்கையைத் தன் வாழ்நாளாக மாற்றியவர் தமிழர் தலைவர், ஆசிரியர் அவர்கள்.
சமூக நீதி, அறிவியல் சிந்தனை, சுயமரியாதை என எண்ணற்ற மேடைகள், ஆயிரக்கணக்கான உரைகள், முடிவில்லா எழுத்துகள், அவை அனைத்தும் ஒரு மனிதரின் உழைப்பை மட்டுமல்ல;
ஓர் இயக்கத்தின் வரலாற்றை மேடையிலிருந்து மேடைக்கு, தலைமுறையிலிருந்து தலைமுறைக்கு, திராவிடச் சிந்தனையின் தீப்பொறி அணையாமல் இருக்க தன் வாழ்நாளையே விளக்காக ஏற்றி வைத்த ஒரு விடாமுயற்சியின் வரலாறு!
இது தனி ஒருவரின் பயணம் மட்டும் அல்ல – ஒரு சமூகத்தின் சுயமரியாதை உயிரோடு தொடர நின்று கொண்டிருக்கும் திராவிடத்தின் காவல் கோட்டை!
‘‘அந்தப் பெரும் பயணத்தின் நடுவே, அவரது கனிவான பார்வையில் எங்கள் மகன் பிறந்த நாளை நினைவுகூர்ந்த அந்த சில நிமிடங்கள்… எங்களுக்கு அது ஒரு குடும்ப நினைவு மட்டும் அல்ல; திராவிடப் போராட்டத்தின் உயிரோடு இருக்கும் வரலாற்றை அருகில் காணும் தருணம். ஒரு தலைமுறை விதைத்த விதை – மற்றொரு தலைமுறையில் மரமாகி நிற்கிறது. அந்த மரத்தின் நிழலில் தான் இன்று சமூகநீதி, கல்வி, சமத்துவம் என்ற கனவுகள் வளர்கின்றன.
அந்தப் பயணத்தின் முக்கால் நூற்றாண்டை தன் தோள்களில் சுமந்து வந்த ஆசிரியர் அவர்களுக்கு மனமார்ந்த மரியாதையும் நன்றியும்!
திராவிடம் என்பது ஒரு சொல் அல்ல… அது ஒடுக்கப்பட்டவர்களின் எழுச்சி! திராவிட அரசியல் என்பது ஒரு தேர்தல் அரசியல் அல்ல… அது மனித சமத்துவத்திற்காக பல தலைமுறைகள் எழுதிய வரலாறு!!
வரலாற்றோடு எடுக்கப்பட்ட என் வாழ்நாள் ஒளிப்படம், இதைவிட ஒரு சிறந்த பிறந்தநாள் பரிசினை எனது குழந்தைகளுக்குத் தந்திட இயலாது.
– செம்மொழி சுரேசு, கோயம்புத்தூர்
