டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* ’பார்ப்பன விரோதம்’ (BRAHMOPHOBIA): மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு: நீதித்துறையிலும், சமூக ஊடகங்களிலும் பார்ப்பன சமூகத்திற்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் பேச்சுகள் அதிகரித்து வருவதாக கூறி, அது தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்க வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி மறுத்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிரான வெறுப்பு பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது என்றாலும், இந்தப் பிரச்சினைகளை நீதிமன்றத்தில் பொதுவாக எடுத்துச் செல்ல முடியாது எனக் கூறினர்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* நீதித்துறை ஊழல் குறித்த என்சிஇஆர்டியின் சர்ச்சை பாடத்தை மறு ஆய்வு செய்ய நிபுணர் குழு: உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்: கடந்த பிப்ரவரியில், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில்(என்சிஇஆர்டி) புதிதாக வெளியிட்ட 8ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில், நீதித்துறையில் ஊழல் என்ற தலைப்பில் நீதித்துறை பற்றிய சர்ச்சைக்குரிய பாடம் இடம்பெற்றிருந்தது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ‘பூஜை” செய்வதால் ஒரு பயனும் இல்லை: பூஜைகள் குறித்த ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் கருத்து: இந்தியர்கள் சரஸ்வதி பூஜையை செய்தாலும், உண்மையான திறமைசாலிகள் வெளிநாடுகளிலேயே காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார். லட்சுமி பூஜை செய்யப்பட்டாலும், செழிப்பு வெளிநாடுகளிலேயே குடி கொண்டிருப்பதாகத் தோன்றுவதைச் சுட்டிக்காட்டிய அவர், “நிச்சயமாக ஏதோ தவறு இருக்கிறது” என்று கருத்து தெரிவித்தார். இதற்கு வழக்கம் போல் பாஜக, சங்கிகள் எதிர்ப்பு.
தி இந்து:
* சிறுபான்மையினர் ஆணையப் பணியிடங்களை நிரப்பாதது குறித்து மோடி அரசுக்கு டில்லி உயர்நீதிமன்றம் கண்டனம்: தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் (NCM) தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான காலியிடங்களை நிரப்பும் செயல்முறையை நிறைவு செய்வதற்கான ஒரு “காலக்கெடுவை” (TIMELINE) வழங்கத் தவறியதற்காக, ஒன்றிய அரசின் மீது டில்லி உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது.
தி டெலிகிராப்:
* பிரியாணி சாப்பிட்டவர்கள் கைது: வாரணாசி கங்கை ஆற்றில் படகில் பிரியாணி விருந்து நடத்தியதாக 14 பேர் நீதிமன்றக் காவலில் அடைப்பு. “ஆற்றின் நடுவே படகில் அமர்ந்து பிரியாணி சாப்பிடுவதும், அதன் மிச்சங்களை நீரில் வீசுவதும் ஸநாதன தர்மத்துக்கு எதிரானது. இந்தச் செயல் இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கம் கொண்டது” என பாஜக யுவ மோர்ச்சாவின் நகரப் பிரிவுத் தலைவர் ஜெய்ஸ்வால் கொடுத்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* தேர்தல் ஆணையத்திற்கு எதிராக மம்தா வழக்கு: மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனேயே, அம்மாநிலத்தை சேர்ந்த பல அய்.ஏ.எஸ். மற்றும் அய்.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யும் மூத்த வழக்குரைஞருமான கல்யாண் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்.
– குடந்தை கருணா
