சென்னை, மார்ச் 18- சட்டப்பேரவை தேர்தலில் புதுச்சேரியில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு நேற்று அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடத்தப்பட்டது.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. புதுச்சேரியில் ஏப்ரல் 9 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையடுத்து ஆளும் கட்சியான திமுக தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.
திமுகவில், தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்கள் பிப்ரவரி 20 முதல் மார்ச் 6 ஆம் தேதி வரை பெறப்பட்டன. இதில் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள், இளைஞரணி பொறுப்பாளர்கள் என மொத்தம் 15,372 பேர் விருப்ப மனுக்கள் அளித்திருந்தனர்.
நேர்காணல்
இந்த நிலையில், விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று தொடங்கியது. முதல் நாளில் புதுச்சேரி தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு அளித்த 116 பேரிடம் நேர்காணல் நடத்தப்பட்டது.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர். பாலு, முதன்மைச் செயலாளர் கே.என். நேரு, அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி, புதுச்சேரி மண்டல பொறுப்பாளர் ஜகத்திரட்சகன் எம்.பி ஆகியோர் அடங்கிய குழு, விருப்ப மனு அளித்தவர்களிடம் தனித்தனியாக நேர்காணல் நடத்தினர். அப்போது தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்பு, தேர்தல் செலவுகள் உள்ளிட்ட விவரங்களை ஸ்டாலின் கேட்டதாக கூறப்படுகிறது.
புதுச்சேரி தேர்தலில் காங்கிரஸுடன் தொகுதி பங்கீடு இன்னும் நிறைவேறாத நிலையில், அங்கு விருப்ப மனு அளித்தவர்களிடம் திமுக நேர்காணல் நடத்தி வருகிறது. புதுச்சேரியைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வேட்பாளர் நேர்காணல் இன்று (மார்ச் 18) தொடங்கி மார்ச் 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
அதேபோல், தேர்தல் முடிவு வெளியாகும் நாளுக்கான கவுண்ட்டவுன் டிஜிட்டல் திரையும் அறிவாலயம் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
