மனித உறுப்புகளில் சிறுநீரகத்தின் பங்களிப்பே பிரதானமானது. சிறுநீரக செயல் இழப்பு சிறியவர்-பெரியவர், ஏழை-பணக்காரன், ஆண்-பெண் என்று பாகுபாடு இன்றி எல்லோரையும் பாதிக்கக் கூடியது. உலக அளவில் மக்கள் இறப்புக்குக் காரணமாக 5ஆவது இடத்தில் இருப்பது சிறுநீரக செயல் இழப்பாகும்.

குருதியைச் சுத்தம் செய்கிறது
நமது உடலின் வயிற்றின் பின்பகுதியில் விலா எலும்புக்குக் கீழே பக்கத்திற்கு ஒன்றாக அவரை விதை வடிவில் இரண்டு சிறுநீரகங்கள் அமைந்து இடாவிடாது வேலை செய்துகொணடு இருக்கின்றன.
நம் உடலில் உள்ள இரண்டு சிறுநீரகங்களும், ஒரு நிமிடத்திற்கு 1,200 மில்லி குருதியைச் சுத்தம் செய்து கொண்டு இருக்கிறது. குருதியைச் சுத்தம் செய்வது மட்டும் அதன் வேலையல்ல. குருதியில் உள்ள கழிவுகளையும், அதிக திரவத்தையும் வடிகட்டி சிறுநீராக வெளியேற்றுகின்றன.
இதைத் தவிர குருதியின் அமிலத் தன்மையை சரி செய்வது, குருதியில் உள்ள சிவப்பு அணுக்களுக்குத் தேவையான எரித்திரோ பாயிடினை உற்பத்தி செய்வது, குடலில் இருந்து கால்சியத்தை கிரகிக்கக் கூடிய சக்தியுள்ள வைட்டமின் ‘டி’யை உற்பத்தி செய்வது, குருதியிலுள்ள சோடியம், பொட்டாசியம் போன்ற தாதுக்களை சமநிலையில் வைத்திருப்பது, குருதி அழுத்தத்தை சரியான அளவில் வைத்து இருப்பது, குருதியில் உள்ள கழிவுகள், நச்சுகள் மற்றும் அதிகப்படியான நீரை வெளியேற்றி குருதி அழுத்தத்தை ஒழுங்குபடுத்தி எலும்பு ஆரோக்கியம் மற்றும் சிவப்பு அணுக்களைப் பராமரிக்க சிறுநீரகமே உதவுகிறது.
வலி நிவாரணி
நன்றாக இயங்கிக் கொண்டிருக்கும் சிறுநீரகங்கள் செயல் இழக்கும் தன்மையை கிட்னி பெயிலியர் என்கிறோம். குருதிக்கொதிப்பு மற்றும் சர்க்கரை நோய்களுக்கு முறையாக சிகிச்சை பெறாமலும், முதுகுவலி, மூட்டுவலி, பல்வலி, தலைவலி, மாதவிடாய் கோளாறு, காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு அடிக்கடியோ அதிகமாகவோ மருத்துவரின் ஆலோசனையின்றி வலி நிவாரணி மாத்திரைகளைப் பயன்படுத்துவது சிறுநீரகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
அதிக குருதி அழுத்தம், சர்க்கரை நோய், சிறுநீரக குழாய் நீண்ட நாள் அடைப்பு போன்றவை சிறுநீரகத்தை பழுதடைய வைக்கின்றன.
தேவையில்லாமல் தாது கலந்த லேகியம் சாப்பிடுவது இரண்டு சிறுநீரங்களும் பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணங்களாகும். இதைத் தவிர குடும்ப வழி மரபணுக்களினாலும், சிறுநீரக நோய்த் தொற்றுக்கு முறையாக சிகிச்சை பெறாவிட்டாலும் சிறுநீரகங்கள் பாதிக்கப்படுகின்றன.
உணவுப் பதார்த்தங்களில் அதிகப் படியான உப்பு கலந்திருப்பது சிறுநீரங்களை கடினமாக உழைக்கச் செய்துவிடும். குருதி அழுத்தத்தை அதிகப்படுத்திவிடும். இவையே சிறுநீரக நோய்க்கு முக்கியக் காரணமாகும்.
சிறுநீரை அடக்கி வைப்பது சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகங்களின் செயல்பாட்டை சீர்குலைத்துவிடும். இந்தப் பழக்கம் தொடர்ந்தால் சிறுநீரக கற்களோ, சிறுநீரகத் தொற்றோ ஏற்படக் கூடும். சிறுநீர்ப்பையில் சிறுநீர் அதிகம் தேங்குவதற்கு இடம் கொடுக்காமல் பார்த்துக் கொள்வது நல்லது.
சிவப்பு இறைச்சி பதப்படுத்தப்பட்ட உணவுகளில் இருந்து பெறப்படும் புரதம் நாளடைவில் சிறுநீரங்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும். காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட வற்றில் இருந்து கிடைக்கும் புரதத்தை அதிகம் உட்கொள்ள வேண்டும். சரியாக தூக்கமின்மை சிறுநீரக செயல்பாட்டை பாதிக்கும். 7 மணி நேரமாவது தூங்க வேண்டும். புகைப்பிடிப்பது சிறுநீரகங்களுக்கு செல்லும் குருதி ஓட்டத்தை குறைத்து சிறுநீரக நோய்களுக்கு வழிவகுத்துவிடும்.
பெண்களுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட அதிக உடல் எடை, சர்க்கரை நோய், அதிக நாள் குருதிக் கொதிப்பு மற்றும் பிரசவ காலங்களில் ஏற்படும் நோய்கள் முக்கியமான காரணமாகும். இன்று எல்லா உறுப்புகளையும் பாதிக்கக்கூடிய ‘ஆட்டோ’ இம்முன்’ வியாதிக்கு முறையாக சிகிச்சை பெறாவிட்டால் சிறுநீரக பாதிப்பு ஏற்படும்.
சிறுநீரில் புரோதம்
பிரசவ காலங்களில் குருதிக் கொதிப்பு அதிகமாகி சிறுநீரில் புரோதம் வெளியாகி எக்லாம்சியா என்ற நோயினாலும், குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் அதிக உதிரப் போக்குக்கு முறையாக சிகிச்சை பெறாவிட்டாலும் சிறுநீரக பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
சிறுவர்களின் சிறுநீரக செயல் இழப்புக்கு முக்கியக் காரணமாக இருப்பது சிறுநீரக மண்டலத்தில் உள்ள பிறவிக் குறைபாடுகள் ஆகும். குடும்ப வழி மரபணுக்களினாலும் அடிக்கடி சிறுநீரக நோய் தொற்றுகளாலும் சிறுநீரகங்கள் பாதிக்கப்படுகின்றன.
பூமியின் வெப்பச் சலனத்தில் வேலை செய்யும் விவசாயி, தாகம் தணிக்கப் போதிய தண்ணீர் இல்லாததால் அசுத்த தாதுக்கள் நிறைந்த தண்ணீரைக் குடிக்கின்றனர்.
பூச்சிக்கொல்லி மருந்து
இதனாலும் விவசாயத்திற்கு அதிக ரசாயன உரங்களையும் பூச்சிக்கொல்லி மருந்துகளையும் பாதுகாப்பு இல்லாமல் உபயோகிப்பதாலும் தொடர்ந்து மது அருந்துவதாலும் சிறுநீரகங்கள் பாதிக்கப்படுகின்றன.
சிறுநீரக செயல் இழப்பின் அறிகுறியாக பசியின்மை, வாந்தி, கைகால் வீக்கம், குருதி சோகை போன்றவை ஏற்படும். சிறுநீர் சரியாகப் பிரியாத நிலையில் மூச்சுத் திணறல் ஏற்படும். சிறுநீரகம் பாதித்த பெண்களுக்கு மாதவிடாய் சீக்கிரம் ஏற்படுவதால் உடலில் சுரக்கும் ஹார்மோன் குறைவதால் எலும்பு தேய்மானம், இதய பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
சிறுநீரக பாதிப்பினை கண்டறிய சிறுநீரக பரிசோதனை, குருதியில் யூரியா, கிரியாடினின் சோடியம், பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ், கியாடினின் கிலியரன்ஸ் போன்ற பரிசோதனைகளைச் செய்ய வேண்டும்.
சிறுநீரக பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரைகளையும் உணவு முறைகளையும் கடைப்பிடித்தால் சிறுநீரகம் முழுவதும் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கலாம்.
பொட்டாசியம் அதிகரிகின்ற உணவுப் பொருட்கள் இதய பாதிப்பை ஏற்படுத்தும் பொட்டாசியம் அதிகமாக உள்ள ஆரஞ்சு, சாத்துக்குடி, நெஸ் காபி, இளநீர் போன்ற பொருட்களை சாப்பிடக் கூடாது. குருதியில் உள்ள கழிவுகளையும் அதிக திரவத்தையும் நீக்க கூடியது டயாலிசிஸ். இவை குருதியை இயந்திரங்கள் மூலம் சுத்தம் செய்வது. மற்றொரு முறை வயிற்றில் குழாய் சொருகி திரவம் விட்டு சுத்தம் செய்வது.
டயாலிஸ்
உயிர்காக்க கூடியது டயாலிசிஸ், மிக மோசமான நிலையில் இதயம் பாதிக்கப்பட்ட நேரத்தில் டயாலிசிஸ்க்கு வரும்போது சில நேரங்களில் உயிருக்கு ஆபத்தாக முடிகிறது. டயாலிசிஸ் போட்ட பிறகு நன்றாக இருக்கிறேன். தொடர்ந்து டயாலிசிஸ் தேவையா? சிலருக்கு டயாலிசிஸ் போட்ட பிறகு அவர்கள் உணவுக் கட்டுப்பாட்டுடனும், முறையாக சிகிச்சையும் ஆனால் நான் நன்றாக தானே இருக்கிறோம் என்று உணவு கட்டுபாடு இல்லாமல் இருந்தால் மிக மோசமான நிலையில் டயாலிசிஸ் செய்ய வேண்டிவரும். சில நேரங்களில் சிகிச்சைபலன் அளிக்காமல் போய்விடும். டயாலிசிஸ் செய்து கொண்டால் பூரண குணமாகி விடும் என்று நினைப்பது தவறு.
மாற்று சிறுநீரகம் பொருத்திக்கொள்வதற்கு அதே வகை இரத்தம் அல்லது ஓ குரூப் குருதி உள்ளவர்கள் சிறுநீரக கொடை தரலாம், அம்மா, அப்பா, அண்ணன், தங்கை என்ற உறவு முறையில் கொடை பெறுவது நல்லது. சாலை விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்டவர்களுடைய சிறுநீரகத்தை அவர்களது உறவினர்கள் அனுமதியுடன் பொருத்தப்படுகிறது.
தினமும் உடற்பயிற்சி செய்து உணவுக் கட்டுப்பாட்டில், உடல் எடைக்கூடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குருதிக் கொதிப்பு, சர்க்கரை நோயை கட்டுபாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். புகையிலை மற்றும் புகைப்பிடிப்பதை தவிர்க்க வேண்டும். தேவை இல்லாமல் வலிநிவாரணி மாத்திரைக்களையும், தாதுக் கலந்த லேகியத்தையும் உபயோகப்படுத்தக்கூடாது. மருந்துக் கடைக்கு சென்று வலி நிவாரணிகளையும் மாத்திரைகளையும் சாப்பிடக் கூடாது. உடம்புக்கு வேண்டிய அளவு தண்ணீர் சாப்பிட வேண்டும். சிறுநீர் சீராக வரும் வரை திரவ ஆகாரம் சேர்க்க முக்கியமானது ஆண்டுக்கு ஒருமுறை குருதியில் யூரியா, கிரியாட்டினின், வயிற்று ஸ்கேன் போன்ற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். முக்கியமாக குருதிக் கொதிப்பு, சர்க்கரை நோய் உள்ளவர்கள் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் பரிசோதனை செய்துக்கொள்வது வேண்டும்.
உலக அளவில் 10 சதவீத பேர் கிரானிக்கிட்னி பெயிலியரினால் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் 15 லட்சம் பேர் கிட்னி பெயிலியரினால் பாதிக்கப்படுகின்றனர். இதில் 80-90 சதவீதம் முறையாக சிகிச்சை பெற முடியாத சூழலில் உள்ளனர். வயது ஆக ஆக சிறுநீரகத்தின் செயல்பாடுகளும் குறைந்துக்கொண்டு வரும். ஆகவே துரித உணவு மற்றும் விளம்பரத்தைப் பார்த்து தேவையில்லாதவற்றை சாப்பிடுவதை தவிர்த்து சிறுநீரகத்தை பாதுகாப்போம். சிறுநீரகம் தொடர்பான எந்தப் பிரச்சினையையும் அலட்சியம் செய்யாமல் முறையான சிகிச்சை பெற்று சிறுநீரகம் காப்போம். சீரிய வாழ்வு வாழ்வோம்.
