தமிழ்நாட்டில் அண்மைக் காலமாக ஒன்றிய அரசின் திட்டங்கள் வெறும் அரசியல் பிரச்சாரமாக மாற்றப்படுகிறது. அதற்குச் சான்றாக அமைந்திருக்கிறது – மதுரைக் கோட்ட ரயில் ஓட்டுநர் குறித்த செய்திகள்.
மதுரைக் கோட்டத்தைச் சேர்ந்த மூத்த லோகோ பைலட் ஒருவர், பிரதமர் மோடி தமிழ்நாட்டில் தொடங்கி வைத்த மூன்று முக்கிய ரயில்களை இயக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். 2019 தேஜஸ் ரயில், 2025 புதிய பாம்பன் பால ரயில் மற்றும் புதிய ராமேசுவரம் – மங்களூரு எக்ஸ்பிரஸ் என மிக முக்கியமான தருணங்கள் அனைத்தும் இவருக்கே வழங்கப்பட்டுள்ளன.
இந்தத் தேர்வு தற்செயலானது என்று கடந்து செல்ல முடியாது! மதுரைக் கோட்டத்தில் இவரை விட மூத்த மற்றும் தகுதியான ஓட்டுநர்கள் பல பேர் இருந்தும், குறிப்பிட்ட கட்சியின் சின்னத்தை பெயராகக் கொண்ட ஒருவரையே (தாமரைச்செல்வன்) மீண்டும் மீண்டும் முன்னிறுத்துவது, ஆழ்மனதில் கட்சியின் சின்னத்தைப் பதிய வைக்கும் ஒரு ‘மறைமுக விளம்பர உத்தி’ தான்!
ஓய்வு பெறும் நிலையில் இருக்கும் ஓர் அரசு ஊழியரின் உழைப்பைப் பாராட்டுவது முறைதான். ஆனால், அவரை ஓர் அரசியல் கருவியாக மாற்றி, அதன் மூலம் வாக்குகளைச் சேகரிக்க நினைப்பது – ஆரோக்கியமான அரசியலுக்கு அழகல்ல. தமிழ்நாட்டில் பாஜக எடுத்து வரும் இத்தகைய முயற்சிகள், இங்குள்ள அரசியல் முதிர்ச்சி கொண்ட மக்களிடம் எடுபடப்போவதில்லை.
ஆனாலும், ஆசை வெட்கம் அறியாதே! குறிப்பிட்ட அந்த ஓட்டுநருக்கே மூன்று முறை இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. காரணம் – அவர் பெயரில் அவர்கள் கட்சியின் சின்னம் உள்ளது!
அதாவது பிஜேபியின் தேர்தல் சின்னமான ‘தாமரை’ என்பது அவர் பெயரில் – ‘‘தாமரைச்செல்வன்’’ என்று உள்ளதாம் – எத்தகைய அற்பத்தனம் இது!
இதற்கு முன்பும், தமிழ்நாட்டில் தைப்பூசத்தை என்னவோ இவர்கள் மட்டுமே கொண்டாடுவதுபோது தமிழ்நாடு முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டினார்கள்.
அதே போல், தமிழ்நாட்டின் கோட்டையின் மேலே பிரச்சினைக்குரிய தூண்போன்ற ஒன்றை உருவாக்கி அதில் மோடி கார்த்திகை தீபம் ஏற்றுவதுபோல் சுவரொட்டிகள் ஒட்டினார்கள். ஆச்சாரங்களை – அனுஷ்டானங்களை இவர்கள் வசதிக்கு மாற்றிக் கொள்வார்கள்! ஆச்சாரத்தின் யோக்கியதை இதுதான்!
பழைய ரயில்களில் சிறிது மாற்றம் செய்து அதற்கு ‘வந்தே பாரத்’ என்று பெயர் சூட்டப்பட்டது. பாஜகவினரோ அதனை ‘‘புல்லட் ரயில் விட்டார் மோடி’’ என்று சுவரொட்டி ஒட்டி ‘புருடா’ விடுகின்றனர்!
அதே போல் மதுரையில் திருப்பரங்குன்றம் பிரச்சினை நடந்து கொண்டு இருக்கும் போது, மோடி திருப்பரங்குன்றம் சென்று முக்கியப் பிரகாரம் வரை சிவப்புக்கம்பளம் விரிக்கப்பட்டு நெடுஞ்சான் கிடையாக விழுந்து வணங்கினார்.
தமிழ்நாட்டுக் கோவில்கள் வரலாற்றில் எந்த ஒரு தலைவருக்கும் கோவில் உட்பிரகாரம் வரை சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டதும் கிடையாது – இப்படி ஒரு நாடகத்தை எவரும் அரங்கேற்றியதும் கிடையாது.
அரசுத் திட்டங்கள் என்பவை வரி செலுத்தும் மக்களின் உரிமை. அதை ஒரு கட்சியின் விளம்பரத் தட்டியாக மாற்றுவதும், அரசு ஊழியர்களின் பெயர்களைக் கூட அரசியல் குறியீடுகளாகப் பயன்படுத்துவதும் – ஜனநாயகப் பண்புகளுக்கு முற்றிலும் முரணானது என்று தெரிந்தும், ‘சிறுபிள்ளைத்தனமான’ பாஜகவின் இத்தகைய விளையாட்டுகள் தமிழ்மக்களிடையே மேலும் வெறுப்பை விதைக்கத்தான் செய்யும். ஆக்கப்பூர்வமாக மக்கள் நலன்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்த முடியாத – இயலாமைக்குச் சொந்தக்காரர்கள் இப்படித்தான் கபட வேலைகளில் ஈடுபடுவார்கள். பாம்பு ‘படம்’ எடுப்பதுகூட அழகாகத்தான் இருக்கும்.
ஆனாலும், ஆபத்தே – அது நஞ்சை மட்டுமே கக்கும்! தேவை எச்சரிக்கை!
