மகாராட்டிரத்தில் மதமாற்றத் தடை சட்டம்!
மகாராட்டிர மாநிலத்தில் மதமாற்றத் தடை சட்டம் (மசோதா) ஒன்றுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சட்ட விரோத மதமாற்றத் தடை சட்டத்திற்கான வரைவு மசோதாவுக்கு, அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதன்படி, வேறு மதத்திற்கு மாறும் நபர், 60 நாட்களுக்கு முன் உரிய அதிகாரியிடம் கட்டாயம் ஒப்புதல் பெற வேண்டும்.
மகாராட்டிராவில் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பா.ஜ., – சிவசேனா – தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்கு, ‘லவ் ஜிஹாத்’ என்ற பெயரில் கட்டாய மத மாற்றம் நடப்பதாக புகார்கள் வந்தனவாம்! இதையடுத்து, சட்ட விரோத மதமாற்றத் தடை சட்டத்தைக் கொண்டு வர மாநில அரசு முடிவு செய்துள்ளதாம்.
முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் (5.3.2026) நடந்தது. இதில், சட்ட விரோத மதமாற்றத் தடை சட்டத்திற்கான வரைவு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
நடப்பு சட்டமன்ற நிதி நிலை அறிக்கைக் கூட்டத் தொடரில், இந்த மசோதாவை தாக்கல் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.
- மதம் மாற விரும்பும் நபர், 60 நாட்களுக்கு முன் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கட்டாயம் ஒப்புதல் பெற வேண்டும்.
- மதம் மாறிய பின், 25 நாட்களுக்குள் மத மாற்றம் செய்ததை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.
- கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்தால் பிணையில் வெளிவர முடியாத குற்றமாகக் கருதி, 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை; 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்!
- மதமாற்றம் தொடர்பாக சம்பந்தப்பட்ட நபரின் உறவினர்கள் புகார் அளித்தால், காவல்துறை வழக்குப் பதிவு செய்து உடனே விசாரிக்க வேண்டும்.
பாரதிய ஜனதாவின் பட்டவர்த்தமான குருதி ஓட்டம் (‘ஜீப சுபாவம்’) என்பது சதா மதத்தைப் பற்றிச் சிந்திப்பதும் – சிறுபான்மையின மக்கள்மீது காழ்ப்புணர்வுமேயாகும்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி (Article 25) ஒருவருக்கு மதம் மாற உரிமை உண்டு. அது வலுக்கட்டாயமாக இருக்கக் கூடாது – பணம், பரிசுகள் ஆசைகாட்டி இருக்கக் கூடாது என்று 1977இல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு இருப்பது உண்மைதான்.
இந்தியத் துணைக் கண்டத்தைப் பொறுத்தவரை, பிஜேபி ஆளும் மாநிலங்கள் அனைத்திலும் மதமாற்றத் தடை சட்டம் உள்ளது.
உத்தரப்பிரதேசம், ஒடிசா, அருணாசலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், ஜார்க்கண்ட், அரியானா, கருநாடகா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இச்சட்டம் உள்ளது.
தமிழ்நாட்டிலும் செல்வி ஜெ. ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் இப்படியொரு சட்டம் கொண்டு வரப்பட்டது என்பது உண்மையே! தமிழ்நாட்டின் கடும் எதிர்ப்புக்கிடையே, அது விலக்கிக் கொள்ளப்பட்டது.
மத மாற்றத் தடை சட்டம் கொண்டு வர வேண்டியதன் அவசியம் என்ன?
இந்தியாவைப் பொறுத்தவரையில், பிறந்த மதத்திலேயே இன்றுவரை இருப்பவர்களின் எண்ணிக்கை சதவிகிதத்தை உற்று நோக்கினால், ஹிந்து – 99%, முஸ்லிம் – 97%, கிறித்தவர் – 96%, ஜைன் – 97% என்ற புள்ளி விவரம் உள்ளது.
இந்தப் புள்ளி விவரத்தை வைத்துப் பார்க்கும் பொழுது மதமாற்றம் குறிப்பிடத்தக்க வகையில் நடக்கவில்லை என்பது வெளிப்படை!
மதமாற்றத் தடை சட்டத்தை நியாயமான வகையில் செயல்படுத்த வாய்ப்பு உண்டா?
இயல்பாகவே தன் விருப்படி மதமாற்றம் செய்து கொண்டாலும் இன்றைய பிஜேபி, ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் வட்டாரங்களின் அதிரடி மதவாதப் போக்கை உணர்ந்தவர்களுக்கு ஓர் உண்மை தெளிவாகத் தெரியும் – சம்பந்தப்பட்டவர்மீது வேறு காரணங்களைச் சுமத்தி தண்டனை வாங்கிக் கொடுப்பதுவரை ஓய மாட்டார்கள்; அல்லது திரும்பி ஹிந்து மதத்துக்கு வரும் வரை ஓய மாட்டார்கள்.
அது மட்டுமல்லாமல், மதம் மாறுவதற்கு முன் 60 நாட்களுக்குமுன் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் ஒப்புதல் பெற வேண்டுமாம். சிவசேனா – பிஜேபி ஆளும் மகாராட்டிரத்தில் அதிகாரிகள் எந்த மனப்பான்மை யுடையவராக இருப்பர் என்பதற்கு ஆராய்ச்சித் தேவையா? அதுவும் 60 நாட்கள் இடைவெளியிருந்தால் என்னவெல்லாம் நடக்கும்?
மதம் – மத மாற்றம் – மத மறுப்பு எல்லாமே தனி மனிதரின் உரிமையைச் சார்ந்தது என்பதே மனிதகுல மாண்பு! அதில் தலையிடுவது அராஜகத்தின் உச்சமாகும்.
