புதுடில்லி, மார்ச் 1– என்.சி.இ.ஆர்.டி 8ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் நீதித்துறை குறித்து இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய கருத்துகள் நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.
இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியின் நிலைப் பாட்டை காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மோடியின் கோபம் நாடகம்
இதுகுறித்து தனது ‘எக்ஸ்’ (X) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜெய்ராம் ரமேஷ், இந்தப் பிரச்சினையில் பிரதமர் மோடி வெளிப்படுத்தும் அதிருப்தி வெறும் ‘பாசாங்கு’ என்று குறிப்பிட்டுள்ளார்.
“பாதிப்பைக் கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியாகவே, நீதித்துறை குறித்த விமர்சனம் தனக்கு அதிருப்தி அளிப்பதாக பிரதமர் செய்திகளை கசிய விட்டுள்ளார். இது ஒரு போலியான கோபம்,” என அவர் சாடியுள்ளார்.
கடந்த பத்தாண்டு களாகப் பாடப் புத்தகங்களில் திட்டமிட்டு நச்சுத் தன்மையை பரப்பும் செயலுக்குப் பிரதமரே தலைமை தாங்குவதாக ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது பதிவின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
வகுப்புவாத தலையீடு: பாடப் புத்தகங்களை மாற்றி எழுதும் பணியில் ஈடுபட்டுள்ள ‘நாக்பூர் கும்பலை’ (ஆர்.எஸ்.எஸ்-அய்க் குறிப்பிட்டு) வழிநடத்துவதும் வடிவமைப்பதும் பிரதமர் மோடிதான்.
கல்வியாளர்கள் மீது விமர்சனம்
பாடப்புத்தகங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் ‘போலி கல்வியாளர்கள்’ கும்பலுக்குப் பிரதமரே பொறுப்பு.
பொறுப்பைத் தட்டிக்கழித்தல்
தற்போது பிரச்சினை பெரிதானதும், இதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல அவர் ஒதுங்கப் பார்ப்பது அப்பட்டமான பாசாங்குத்தனம்.
8ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் நீதித்துறை குறித்த சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு உச்சநீதி மன்றம் ஏற்கனவே தடை விதித்துள்ள நிலையில், இந்தப் பாடப்புத்தக மாற்றங்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
“பாடப்புத்தகங்களை மாற்றி எழுத எடுக்கப் பட்ட முடிவுகள் குறித்து உச்சநீதிமன்றம் முழு அளவிலான விசாரணைக்கு உத்தர விட வேண்டும்” என்று ஜெய்ராம் ரமேஷ் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
என்.சி.இ.ஆர்.டி பாடப்புத்தகங்களில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள், இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் ஜனநாயக அமைப்பு களுக்கு எதிரானது என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
