புதுடில்லி, பிப். 16- இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து நிலநடுக் கங்கள் ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சிக்கிம் மாநிலத்தின் நம்ச்சி பகுதியில் நேற்று (15.2.2026) மதியம் 1.09 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 2.5 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மய்யம் (NCS) தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கமானது பூமியின் அடியில் 5 கி.மீ. ஆழத்தில் மய்யம் கொண்டிருந்தது. இது 27.40 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 88.38 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் ஏற் பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, நேற்று (15.2.2026) இரவு 8.50 மணியளவில் அருணாச்சல பிரதேச மாநிலத்தின் சாங்லாங் பகுதியில் மற்றொரு நிலநடுக்கம் உணரப்பட்டது. இதன் தீவிரம் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகியுள்ளது. தேசிய நில அதிர்வு மய்யத்தின் தரவுகளின்படி, இந்த நிலநடுக்கம் பூமியின் அடியில் 10 கி.மீ. ஆழத்தில், 27.32 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 96.12 டிகிரி கிழக்கு தீர்க்கரேகை பகுதியில் மய்யம் கொண்டிருந்தது.
இந்த இரண்டு நிலநடுக்கங்களி னாலும் ஏற்பட்ட உயிர்ச் சேதங்கள் அல்லது கட்டடச் சேதங்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும், ஒரே நாளில் இரண்டு வடகிழக்கு மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
