மதுரை, பிப். 12- தமிழ்நாட்டில் சாலைகள், தெருக்கள், நீர்நிலைகளின் ஜாதியப் பெயர்களை நீக்கக் கோரிய அரசாணையில் குறைபாடு இருப்பதாக தெரிவித்த உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, அது எப்போது சரி செய்யப்படும் என்று கேள்வி எழுப்பியுள்ளது. மதுரையைச் சேர்ந்த பரமசிவம், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் குடியிருப்புகள், சாலைகள், தெருக்கள், நீர் நிலைகளுக்கு வைக்கப்பட்டுள்ள ஜாதிப் பெயர்களை நீக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது
சாலைகளுக்கு ஜாதிப் பெயர்
அதன்படி, கிராமங்கள், குடியிருப்புகள், சாலைகள், தெருக்கள், நீர் நிலைகளின் ஜாதிப் பெயர்களை நீக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆதி திராவிடர் காலனி, ஹரிஜன் குடியிருப்பு, வண்ணான்குளம் போன்ற ஜாதிப்பெயர்களை நீக்குதல், புதிய பெயரிடும் பணிகளை நவ. 19ஆம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டது. இந்த நடைமுறையில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. எனவே, இந்த அரசாணைக்குத் தடை விதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, அரசாணையைச் செயல்படுத்த தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த மனு மீண்டும் நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வில் நேற்று (11.2.2026) விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், அரசாணை அடிப்படையில் 45 நாட்களில் தமிழ்நாடு முழுவதும் உள்ள சாலைகள், தெருக்கள், ஊரின் பெயர்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களின் பெயரை மாற்றுவது நடைமுறையில் சாத்தியமானது அல்ல. எனவே, தெளிவு இல்லாமலும், போதிய அவகாசம் வழங்கப்படாமலும் பிறப்பிக்கப் பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
அரசுத் தரப்பில், “அந்த அரசாணையில், குறிப்பிட்ட காலத்துக்குள் ஒவ்வொரு பணியையும் முடிக்க வேண்டும் என்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்தான் உள்ளன. எனவே, தடையை விலக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டது.
23ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு
இதையடுத்து நீதிபதிகள், “நீதிமன்றம் அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது. ஆனால், இந்த அரசாணையில் குறைபாடுகள் உள்ளன. நடைமுறைப்படுத்துவதிலும் சில கேள்விகள் எழுகின்றன. அவற்றை எவ்வாறு சரி செய்வீர்கள் என்று நீதிமன்றம் அறிய விரும்புகிறது.
பிப். 23-க்கு தள்ளிவைப்பு: மேலும், ஜாதிப் பெயர்களை நீக்குவது குறித்து 1978ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டனர்.
