புதுடில்லி, பிப். 1– ரூ.40,000 கோடி வங்கி மோசடி மற்றும் பணமோசடி வழக்கில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (RCOM) நிறுவனத்தின் மேனாள் இயக்குநர் புனித் கார்க் அமலாக்கத் துறை அதிகாரிகளால் (ED) அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
RCOM, RHFL, RCFL, ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் மற்றும் ரிலையன்ஸ் பவர் லிமிடெட் உள்ளிட்ட பல அனில் அம்பானி குழும நிறுவனங்களின் பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக புனித் கார்க் கைது செய்யப்பட்டுள்ளார்.
புனித் கார்க் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில் 20 ஆண்டுகள் முக்கியப் பொறுப்புகளை வகித்தவர். 2017ஆம் ஆண்டு அக்டோபரில் அவர் ஆர்சிஓஎம் நிறுவனத்தின் செயல் இயக்குநராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர், 2019 ஏப்ரல் முதல் 2025 ஏப்ரல் வரை நிர்வாக பொறுப்பில்லா துறை இயக்குநராகவும் பணியாற்றினார். ரிலையன்ஸ் குழுமம் மீதான பண மோசடி வழக்கில் முக்கிய பங்கு வகித்தவர் புனித் கார்க் என்கிறது அமலாக்கத்துறை.
