புதுடில்லி, ஜன.10- ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்கும் பொது நிகழ்ச்சி மற்றும் சந்திப்புகளில் அவருக்கு மட்டும் ஒரு வித்தியாசமான குடிநீர் பாட்டில் ஒன்று இருக்கும். அது ‘ஹிமாலயா (Himalaya)’ பிராண்ட் குடிநீர் ஆகும்.
இமயமலையில் உள்ள நீருற்றுகளில் இருந்து தயாரிக்கப்படும் இந்தக் குடிநீரின் விலை ஒரு லிட்டர் ரூ. 850 ஆகும். அமித் ஷாவின் குடிநீர் செலவு மட்டும் ஒரு நாளைக்கு ரூ.5,000 ஆகும் என செய்திகள் வெளியாகி வருகின்றன.
மோடி (குடிநீர் முதல் உயர்தர காளான் வரை), அமித் ஷா உள்ளிட்ட பாஜகவினர் மக்கள் வரிப்பணத்தை மிக மோசமாக வீணடித்த நிலையில், தங்கள் கட்சி ஆளும் மாநில மக்களுக்கு கழிவுநீர் விநியோகித்து உயிர்களைப் பறித்து வருகின்றனர்.
பாஜக ஆளும் மத்தியப்பிரதேச மாநிலத்தின் இந்தூரில் கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்து 14–க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 2000–க்கும் மேற்பட்டோர் தீவிர உடல்நலக்குறைவால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
அதே போல “மோடியின் மாடலான” பாஜக ஆளும் மற்றொரு மாநிலம் குஜராத்தின் காந்தி நகரில் (அமித் ஷாவின் மக்களவை தொகுதி) கழிவு நீர் கலந்த குடிநீரை பருகிய 20–க்கும் மேற்பட்டோர் டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் கிரேட்டர் நொய்டாவின் டெல்டா 1 பகுதியில் வசிக்கும் பல குடியிருப்பாளர்கள், அசுத்தமான குடிநீரைப் பருகியதால் உடல்நலக் குறைவுக்கு ஆளாகியிருப்பதாகப் புகார் தெரிவித்துள்ளனர். ஜனவரி 6, 7 நாள்களில் இந்தப் பகுதியில் உள்ள குழாய் நீரைப் பயன்படுத்திய பலருக்கு வாந்தி, காய்ச்சல், வயிற்று வலி மற்றும் வயிற்றுப் போக்கு போன்ற அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன.
சுமார் 6 முதல் 7 குடும்பங்கள் (30–க்கும் மேற்பட்டோர்) பாதிக்கப் பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த தொடர் சம்பவங்களால் பாஜக ஆளும் மாநில மக்கள் பதற்றத்தில் உள்ளனர்.
