காசா, அக்.18 காசாவில் நிலவும் பஞ்சத்தைப் போக்குவதற்கு அந்தப் பகுதியில் மிகத் தாராளமாக உணவுப் பொருள்களை அனுமதிக்க வேண்டும் என்று இஸ்ரேலை அய்.நா. வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து உணவு பாதுகாப்பு க்கான அய்.நா. பிரிவான உலக உணவுத் திட்டம் (டபிள்யுஎஃப்பி) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
காசாவில் உணவுப் பற்றாக் குறையால் ஏற்பட்டுள்ள கொடும் பஞ்சத்தை போக்குவதற்கு சிறிது காலம் தேவைப்படும். உணவுப் பொருள்களால் காசாவை நிரப்பினால்தான் அது சாத்தியமாகும். அதற்காக, காசாவுக்குள் செல்லும் அனைத்து வழித்தடங்களையும் திறந்துவிட்டு, உணவுப் பொருள்கள் அந்தப் பகுதிக்கு தாராளமாகச் செல்ல இஸ்ரேல் அரசு அனுமதிக்க வேண்டும்.
காசாவில் இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகு, சுமார் 3,000 டன் உணவுப் பொருள்களை மட்டுமே அந்தப் பகுதிக்குள் கொண்டு செல்ல முடிந்தது.
பல மாதங்களாக முற்றுகை, இடம்பெயர்வு மற்றும் பசியை அனுபவித்த பொதுமக்களுக்கு கூடுதலாக உணவுப் பொருள்களைக் கொண்டு சேர்க்க டபிள்யுஎஃப்பி மிக வேகமாக செயல்படுகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது காசாவின் தெற்குப் பகுதியில் மட்டும் அய்ந்து உணவு விநியோக மய்யங்கள் இயங்கி வருகின்றன. இதை 145-ஆக உயர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக டபிள்யுஎஃப்பி அதிகாரிகள் கூறினர்..