சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு – கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை

8 Min Read

இதுவரையில் நடக்காத ஓட்டுத் திருட்டு நடக்கிறது; காரணம், ஓட்டுத் திருட்டு நடந்தால், அடுத்து நாட்டுத் திருட்டுதான்!
நாட்டைத் திருடுவதற்காகத்தான், முதலில் ஓட்டுத் திருட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது!
தமிழ்நாட்டிலும் அதுபோன்று ஓட்டுத் திருட்டு நடத்தலாம் என்று நினைக்கிறார்கள்!
‘‘கருப்புச் சட்டைக்காரன்’’ இருக்கும்வரை, உங்களுடைய நினைப்பு ஒருபோதும் இங்கே நிறைவேறாது!
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு – கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை

சென்னை,  அக்.17  இதுவரையில் நடக்காத ஓட்டுத் திருட்டு நடக்கிறது. காரணம், ஓட்டுத் திருட்டு நடந்தால், அடுத்து நாட்டைத் திருடுவான். நாட்டைத் திருடுவதற்காகத்தான், முதலில் ஓட்டுத் திருட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. தமிழ்நாட்டிலும் அதுபோன்று ஓட்டுத் திருட்டு நடத்தலாம் என்று நினைக்கிறார்கள். கருப்புச் சட்டைக்காரன் காவலுக்குக் கெட்டிக்காரன் இருக்கும்வரை, உங்களுடைய நினைப்பு ஒருபோதும் இங்கே நிறைவேறாது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

Contents

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு – கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

கடந்த 4.10.2025 அன்று காலை  செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் உள்ள ஆழ்வார் பேலஸ் மண்டபத்தில் நடைபெற்ற, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு – கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

ஆரியம் இன்றைக்கு நெருப்பில் கை வைத்த தைப்போல துடிக்கின்றது. இதனை நன்றாக நீங்கள் புரிந்து கொள்ளவேண்டாமா?

இப்போது மட்டுமல்ல; எப்போதும் தேவை
தந்தை பெரியார்!

ஒன்றே ஒன்று, இளைஞர்களே, இளைய தோழர்களே, சுயமரியாதை இயக்கம் என்ன செய்தது? என்று கேட்கிறார்கள். அதிலும் ஆங்கிலத்தில், Is Periyar relevant today? – பெரியார் இப்போது தேவையா? என்கிறார்கள்.

இப்போது மட்டுமல்ல; எப்போதும் தேவை! விஞ்ஞானிகளைப் போல, மருத்துவக் கல்லூரி களைப் போல, மருத்துவர்களைப் போல!

தொற்று நோய் எந்த ரூபத்தில் வரும்? எப்படி வரும்? என்று கண்டுபிடித்து எல்லோராலும் சொல்ல முடியாது.

அதுபோன்று சமூகத்தில் ஏற்படும் தொற்று களுக்கு, மருந்தைக் கண்டுபிடிக்கின்ற மருத்துவ மனைதான் சுயமரியாதை இயக்கம்.

ஜாதித் தொற்றை, தீண்டாமைத் தொற்றை, மூடநம்பிக்கையை, பெண்ணடிமையை, வைதீ கத்தைப் பரப்பி நிலை கொள்ளுகின்ற தொற்று நோய்க் கிருமிகள்தான் ஆர்.எஸ்.எஸ். என்ற பெய ராலே அமைந்திருக்கின்ற ஒரு பெரிய ஆபத்தாகும்.

மூன்று இயக்கங்கள்  ஒரே ஆண்டில் தோன்றியிருக்கின்றன!

மூன்று இயக்கங்கள்  ஒரே ஆண்டில் தோன்றி யிருக்கின்றன.

ஒன்று, சுயமரியாதை இயக்கம்.

இரண்டு, ஆர்.எஸ்.எஸ்.

மூன்றாவது, கம்யூனிஸ்ட் கட்சி.

மேற்சொன்ன இயக்கங்களின் தனித்தன்மை என்ன என்பதை இன்றைய இளைஞர்கள் தெரிந்துகொள்ளவேண்டும் நண்பர்களே!

சுயமரியாதை என்பது யாருக்குச் சொந்தம்?

சுயமரியாதை இயக்கம் ஏன் தோன்றியது?

சுயமரியாதை என்ற சொல்லுக்கு, நாங்கள் மட்டுமா உரியவர்கள்? என்று தந்தை பெரியார் கேட்டார்.

யார் யாருக்கெல்லாம் பகுத்தறிவு இருக்கிறதோ, யார் யாருக்கெல்லாம் மான உணர்ச்சி இருக்கிறதோ, அவர்களுக்கெல்லாம் சுயமரியாதை என்பது சொந்தம்.

அந்தச் சுயமரியாதை இல்லாவிட்டால், மனிதனுக்கு முதுகெலும்பு இருந்தும், அவனால் நிமிர்ந்து நிற்க முடியாது

இந்த அரங்கத்திற்கு வெளியே சென்று பாருங்கள் தோழர்களே, காவலுக்கு, நம்முடைய மகளிர் நிற்கிறார்கள், காவல்துறை அதிகாரிகளாக நிற்கிறார்கள். இன்னுங்கேட்டால், காவல்துறை தலைமை அதிகாரியாக அடுத்து யார் வருவது என்று சொல்லும்போது, மகளிர் பெயரை அந்தப் பட்டியலில் வைக்கிறார்கள்.

இவையெல்லாம் எப்படி நடந்தது?

சரசுவதி பூஜை கொண்டாடுவதினால் வந்ததா?

ஆயுத பூஜை கொண்டாடியதினால் வந்ததா?

அல்லது அகில இந்திய அளவிற்கு வித்தைகள் காட்டிய கும்பமேளாக்கள் நடந்ததால், வந்ததா?

இல்லை நண்பர்களே!

1929 ஆம் ஆண்டு செங்கற்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க முதல் மாகாண மாநாடு, தீர்மானம், போராட்டம் இவற்றினால்தான் நடந்தது தோழர்களே!

இதோ அந்தத் தீர்மானத்தில் சொல்கிறார்கள்,

சுயமரியாதை இயக்கம் பிறந்திருக்காவிட்டால்….

‘‘ஆண்களைப் போலவே, பெண்களுக்கும் சம உரிமை உண்டு’’ என்று சொன்னார் தந்தை பெரியார்.

நன்றாக எண்ணிப் பாருங்கள், சுயமரியாதை இயக்கம் பிறந்திருக்காவிட்டால், இந்த நிலை வந்திருக்குமா?

பெண்கள், மாதாந்தோறும் ஆயிரம் ரூபாய் “மகளிர் உரிமைத் தொகை’’ வாங்குகிறார்கள்; சொத்துரி மையைப் பெற்றிருக்கின்றார்கள் என்றால், இந்த இயக்கத்தினுடைய அடித்தளப் பணியின், பலன் அது என்பதை விளக்கிச் சொல்லுங்கள்.

இந்த இயக்கத்தினுடைய கொள்கைகளுக்கு உடன்படாதவர்களும் இருக்கிறார்கள். உடன்பட வேண்டிய அவசியமில்லை. உனக்குக் கருத்துச் சுதந்திரம் தந்திருக்கிறோம்; ‘‘நீ சிந்தித்துப் பார். என்னு டைய கருத்தாக இருந்தாலும், அதை அப்படியே ஏற்றுக்கொள்ளாதே’’ என்று சொன்ன ஒரே தலைவர் தந்தை பெரியார். ஒரே இயக்கம் சுயமரியாதை இயக்க மாகும்.

சுயமரியாதை இயக்கம் என்பது
‘‘அறிவு விடுதலை இயக்கம்!’’

சுயமரியாதை இயக்கத்திற்குத் தந்தை பெரியார் சொன்னார் “அறிவு விடுதலை இயக்கம்’’ என்று.

அறிவுக்கு விடுதலை கொடு!

அடிமையாக்காதே!

சங்கிலி போடாதே!

பிணைக்காதே! என்று சொன்ன தலைவர் தந்தை பெரியார்.

அதனுடைய விளைவுதானே, இன்றைக்கு நாமெல் லாம் பட்டதாரிகள். இவர் வழக்குரைஞர். இவர் ஆய்வா ளர். டாக்டர் திருமாவளவன், அதேபோல, பேராசிரியர் என்று வரிசையாகச் சொல்லிக்கொண்டே போகலாம்.

மகளிர், எத்தனை இடங்களைப் பெற்றிருக்கிறார்கள். இவையெல்லாம் எப்படி நடந்தது என்பதை எண்ணிப் பாருங்கள்.

தோழர்களே, சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைக்கு உடன்படாதவர்கள் இன்னமும் இருக்கி றார்கள் என்பது உண்மை.

ஆனால், ஒரே ஒரு கேள்வி- அதற்கு விடை காணுங்கள் – திண்ணையில் கேளுங்கள், தெருவில் கேளுங்கள்.

பெரியாருக்குக் கடன்படாதவர்கள் உண்டா?

உடன்படாதது சரி. ஆனால், எங்களுக்குக் கடன்படாதவர்கள் உண்டா? பெரியாருக்குக் கடன்படாதவர்கள் உண்டா? ஒவ்வொருவர் வீட்டிலும் நீங்கள் வேலைக்குப் போகிறீர்கள்.

அன்றைக்கு சமையலறையில் கரண்டியைத் தூக்கிய கைகள், இன்றைக்குத் துப்பாக்கியைத் தூக்கி நிற்கின்றன.

இது யாரால் நடந்தது?

எப்படி நடந்தது?

தந்தை பெரியார் இல்லாவிட்டால், இது நடந்தி ருக்குமா?

2026 ஆம் ஆண்டு  நடைபெறவிருப்பது வெறும் தேர்தலா?

வெறும் வாக்களிப்பா?

ஏன், ஓட்டைத் திருடவேண்டும் என்று நினைக்கி றார்கள்?

இதுவரையில் நடக்காத ஓட்டுத் திருட்டு நடக்கிறது. காரணம், ஓட்டுத் திருட்டு நடந்தால், அடுத்து நாட்டைத் திருடுவான். நாட்டைத் திருடுவதற்காகத்தான், முதலில் ஓட்டுத் திருட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

உங்களுடைய நினைப்பு ஒருபோதும் இங்கே நிறைவேறாது!

தமிழ்நாட்டிலும் அதுபோன்று ஓட்டுத் திருட்டு நடத்தலாம் என்று நினைக்கிறார்கள். கருப்புச் சட்டைக்காரன் காவலுக்குக் கெட்டிக்காரன்  இருக்கின்ற வரையில், உங்களுடைய நினைப்பு ஒருபோதும் இங்கே நிறைவேறாது.

இங்கே அமர்ந்திருக்கின்றோமே இவ்வளவு பேர். யார், என்ன ஜாதி என்று தெரியுமா?

நூறாண்டுக்கு முன்னால், சுயமரியாதை இயக்கம் பிறப்பதற்கு முன்னால், பெரியார் பணி தொடங்குவதற்கு முன்னால், என்ன நிலை?

ஒருகணம் நினைத்துப் பாருங்கள் இளைய தோழர்களே!

இன்றைக்கு உங்களுக்கு ரசிகர் மன்றம் தெரிகிறதே தவிர, உங்களுடைய பாட்டனார் பட்ட கஷ்டங்கள் தெரியாது.

தாய்மார்களிடமும், மாணவச் செல்வங்களிடமும் அடிக்கடி நான் கேட்கும் கேள்வி!

தாய்மார்களைப் பார்த்து நான் கேட்பதுண்டு, கல்லூ ரிகளில் உரையாற்றும்போது மாணவச் செல்வங்களை நோக்கி நான் கேட்பது ஒன்றே ஒன்றுதான்.

நீங்கள் எல்லாம் கல்லூரிக்கு வந்திருக்கிறீர்கள். முதுநிலைப் பட்டப் படிப்பு படிக்கிறீர்கள். மகிழ்ச்சிதான், அதனால் எங்களுக்குப் பெருமைதான்.  உங்களுடைய அம்மா பட்டதாரி என்றால், கைகளைத் தூக்குங்கள் என்பேன்.

கொஞ்சம் பேர் கைகளைத் தூக்குவார்கள்.

சரி, உங்களுடைய பாட்டி பட்டதாரி என்றால், கைகளைத் தூக்குங்கள் என்பேன்.

ஒருவரும் கிடையாது. காரணம், மூன்று தலை முறையாகத்தான் படிக்கிறார்கள்.

படிப்பதற்காக பணம் கொடுக்கும்
ஒரே ஆட்சி, ‘திராவிட மாடல்’ ஆட்சி!

ஆனால், இன்றைக்குப் பிள்ளைகள் படிக்கிறார்கள். படிப்பதற்காகவே, அவர்களுக்குப் பணம் கொடுக்கும் ஒரே ஆட்சி, ‘திராவிட மாடல்’ ஆட்சிதான்.

ஒரு காலத்தில் படிக்காதே என்று சொன்னார்கள். இன்றைக்கும் அந்தப் போராட்டம் நடந்து கொண்டி ருக்கின்றது.

சுயமரியாதை இயக்கம் ஏன் தேவை?

பெரியாரும், அம்பேத்கரும்
ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்!

மற்றவர்களுடைய உரிமைகளை நாம் பறிக்க வேண்டும் என்பதற்கல்ல இந்த இயக்கம். மற்றவர்களை யெல்லாம் அழிக்கவேண்டும் என்பதற்காக அல்ல. பெரியாரும், அம்பேத்கரும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள். ஒத்த கருத்துடையவர்கள்.

‘‘படி, படி’’ என்று சொன்னவர் தந்தை பெரியார்

இந்த இயக்கம் இல்லாவிட்டால், கல்லூரிகள் வந்தி ருக்குமா? நாங்கள் எல்லாம் பட்டதாரிகளாக ஆகியிருக்க முடியுமா? எங்கள் கைகளில் பேனா இருக்குமா? அதற்குப் பதிலாக என்ன இருந்திருக்கும் தெரியுமா?

மாட்டுக்கோல் இருக்கும். அதைத் தாண்டினால், எதிரி கையில் சூட்டுக்கோல் இருக்கும்.

இதை மாற்றி அமைத்த பெருமை, பெரியாரின் கைத்தடிக்கே உண்டு; சுயமரியாதை இயக்கத்தினுடைய தனித்தன்மைக்கே உண்டு.

இப்போது நடைபெறுகின்ற போராட்டம் வெறும் அரசியல் போராட்டம் அல்ல. இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கும் – மனுதர்மத்திற்கும்தான் போராட்டம்.

‘‘என்னை வாடகைக் குதிரையாகத்தான் பயன்படுத்தினார்கள்’’ என்று வேதனைப்பட்டார் அம்பேத்கர்!

இந்திய அரசியலமைப்புச் சட்டம், பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்களால் உருவாக்கப்பட்ட காரணத்தால், அவருக்கு ஆயிரம் நெருக்கடிகள். அவரை ஒரு வாடகைக் குதிரையாகத்தான் பயன்படுத்தினார்கள் என்று சொன்னார்.

எங்கே சொன்னார் தெரியுமா, நண்பர்களே, பொதுக்கூட்டத்திலோ, ஏதோ ஒரு கூட்டத்திலோ அல்ல; நாடாளுமன்றத்தில் பதிய வைத்தார்.

அவ்வளவு நெருக்கடிக்கிடையில் உருவாகி, அன்றைக்கு எடுத்துச் சொன்ன தத்துவம், சுயமரியாதை இயக்கத்தினுடைய தாக்கம். அதனுடைய வேகம்தான் மிக முக்கியம்.

ஏனென்றால், தென்னாட்டில் சுயமரியாதை இயக்கம். வடநாட்டில் சகோதரர் அவர்கள் சொன்னதைப்போல, ஜோதிபாபூலே அவர்களில் தொடங்கி, அம்பேத்கர் அவர்கள் அங்கே வந்தார்கள்.

சாகுமகராஜ் அவர்கள், பார்ப்பனரல்லாதார் கட்சி என்ற நீதிக்கட்சி மாநாட்டில் கலந்து கொண்டார். இன்றைய இளைஞர்கள் தெரிந்துகொள்ளவேண்டும் நண்பர்களே, நாம் எப்படி சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழாவை நடத்திக் கொண்டிருக்கின்றோமோ, அதே போல, சத்தாராவிலே, மராத்தாவிலே சுயமரியாதை மாநாட்டினை நடத்தி, பாபா சாகேப் அம்பேத்கர் அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துச் சொல்லியிருக்கிறார்கள்.

ஒரு நூறாண்டு,
பல நூற்றாண்டுகளைப் புரட்டிப் போட்டிருக்கிறது!

எனவே, இந்த நூறாண்டுக் காலம் இருக்கிறதே, இது பல நூற்றாண்டுகளைப் புரட்டிப் போட்டதி னுடைய விளைவாகத்தான், பல்வேறு காலகட்டங்களிலே நடந்த காரணத்தினால்தான் நண்பர்களே, இதோ அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றவேண்டும் என்று இன்றைக்கும் முயற்சி எடுக்கிறார்கள்.

உங்கள் செயல்களால், உங்கள் நாணயத்தை ஒருபோதும் காட்ட முடியாது!

ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கும் நூற்றாண்டு விழா. அந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு,  அவர்கள் ஆட்சியில் இருக்கின்ற காரணத்தினால்,  ஆர்.எஸ்.எஸ்.சிற்கு நாணயம் வெளியிடுகிறார்கள். நாணயமில்லாத ஓர் ஆட்சிக்காரர்கள். நாணயமே தெரியாதவர்கள்,  நாணயம் வெளியிட்டு, உங்கள் நாணயத்தைக் காட்ட முடியுமே தவிர, உங்கள் செயல்களால், உங்கள் நாணயத்தை ஒருபோதும் காட்ட முடியாது.

அப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில், அவர்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, அந்த இடத்தில் மனுதர்மத்தை வைக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்.

இரண்டு தத்துவங்களுக்கு
இடையிலான போராட்டம்!

வெறும் தேர்தல் அரசியல் போராட்டமல்ல நண்பர்களே,  இரண்டு தத்துவங்களுக்கு இடையிலான போராட்டம்.

தேர்தல் என்பது ஒரு முகக்கவசம் –

தேர்தல் என்பது ஒரு யுக்தி.

நடைபெறவிருக்கின்ற தேர்தலில் ஓட்டு யாருக்குப் போடவேண்டும் என்பது முக்கியமல்ல.

மானத்திற்காக ஓட்டா?

அடிமைக்காக ஓட்டா?

மீண்டும் நாம் மான உரிமை பெற்றிருக்கின்றோம். மீண்டும் கல்வி உரிமை பெற்றிருக்கின்றோமே, எதற்காக என்று கேட்பதற்காகத்தான்!

(தொடரும்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *