தலைமை நீதிபதி குறித்து சமூக ஊடகங்களில் அவதூறு பஞ்சாபில் காவல்துறையினர் வழக்குப்பதிவு

2 Min Read

சண்டிகர், அக்.9 உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி குறித்து சமூக ஊடகங்களில் ஜாதி ரீதியாகவும், அவதூறு பரப்பும் வகையில் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்தோர் மீது பஞ்சாப் காவல்துறையினர்  வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தின் கஜூராஹோ வில் 7 அடி உயர முள்ள விஷ்ணு சிலையை சமூக விரோதிகள் சிலர் சேதப்படுத்தினர்.இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் விசாரிக்க தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மறுத்துவிட்டார். அத்துடன், ”எதையாவது செய்யும்படி அந்த கடவுளிடமே சென்று கேளுங்கள்,” என கருத்து கூறியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது இந்த கருத்து, ஹிந்துக்களின் நம்பிக்கையை அவமதிக்கும் வகையில் இருப்பதாக பலரும் சமூக வலைதளங்களில் விமர்சித்தனர்.இதைத் தொடர்ந்து, தன் கருத்து தவறாக சித்தரிக்கப்பட்டதாகவும், தான் அனைத்து மதங்களையும் மதிப்பவன் என்றும், தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம், (7.10.2025) வழக்கு விசாரணைக்காக பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு கூடியபோது, 71 வயதான ராகேஷ் கிஷோர் என்ற வழக்குரைஞர், திடீரென காலில் அணிந்திருந்த காலணியை கழற்றி, தலைமை நீதிபதி நோக்கி வீச முயன்றார்.அதற்குள் எச்சரிக்கையடைந்த நீதிமன்ற காவலர்கள், உடனடியாக பாய்ந்து சென்று வழக்குரைஞரை தடுத்து நிறுத்தினர். இதனால், அவர் வீச முயன்ற காலணி தலைமை நீதிபதி மீது படாமல் கீழே விழுந்தது.உச்ச நீதிமன்ற அறையில் நிகழ்ந்த இந்த இடையூறுகளை பொருட்படுத்தாத தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், ‘இது போன்ற சம்பவங்கள் என்னை ஒருபோதும் பாதிக்காது. விசாரணையை தொடருங்கள்’ என, கூறி, நீதிமன்ற பணியில் மூழ்கினார்.

காலணியை வீசிய உடனே, கிஷோரை கைது செய்த காவலர்கள், அவரை வெளியே அழைத்துச் சென்று விசாரித்தனர்.ஆனால், தலைமை நீதிபதி, ‘அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம்’ என, பதிவாளருக்கு உத்தரவிட்டார். இதனால், கிஷோரை காவலர்கள் விடுவித்தனர். எனினும், இந்திய பார் கவுன்சில் இடைநீக்கம் செய்து அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனைத் தொடர்ந்தும் தலைமை நீதிபதியை விமர்சித்து ஆட்சேபனைக்குரிய வகையில் சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பதிவிடத் தொடங்கினர். அந்தப் பதிவுகள் அனைத்தும் பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், நீதித்துறையின் உயர்ந்த அமைப்பை இழிவுபடுத்தும் வகையில் இருந்தன. ஜாதி ரீதியிலும் ஆட்சேபனைக்குரிய வகையிலும் கருத்துகளைப் பதிவிடத் துவங்கினர்.

இது தொடர்பாக வந்த பல்வேறு புகார்களைத் தொடர்ந்து பஞ்சாப் காவல்துறையினர் அத்தகைய கருத்துகளைப் பதிவு செய்தோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 3(1)(r), 3(1)(s) மற்றும் 3(1)(u) மற்றும் பிஎன்எஸ் சட்டப்பிரிவு 96, 352, 353(1), 353(2), 61 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *