புதுடில்லி, செப்.14 காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மணிப்பூருக்குப் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட 3 மணி நேர பயணத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். வன்முறையால் பாதிக்கப்பட்ட மாநிலத்திற்கு மோடி மேற்கொண்ட முதல் வருகை இது.
கார்கே தனது சமூக வலைத் தளப் பதிவில், இந்தப் பயணம் “கேலிக்கூத்து” என்றும், “காயமடைந்த மக்களுக்கு பெரிய அவமானம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மோடியின் வருகை இரக்கத்தின் வெளிப்பாடு அல்ல, அது வெறும் அடையாளப் பயணம் மட்டுமே என்று கார்கே சாடியுள்ளார். சுராசந்த்பூர் மற்றும் இம்பாலில் நடந்த மோடியின் ரோடு ஷோ, நிவாரண முகாம்களில் உள்ள மக்களின் துயரத்தைக் கேட்பதில் இருந்து தப்பிக்கும் ஒரு தந்திரம் என்று அவர் குற்றம்சாட்டினார்.
மணிப்பூரில் கடந்த 864 நாட்களாக வன்முறை நீடித்த நிலையில், 300 பேர் உயிரிழந்து, 67,000 பேர் இடம்பெயர்ந்தனர். இந்த காலகட்டத்தில் மோடி 46 வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். ஆனால், சொந்த நாட்டு மக்களுக்கு ஆறுதல் தெரிவிக்க வரவில்லை. மோடியின் கடைசி மணிப்பூர் வருகை ஜனவரி 2022-இல், அதுவும் தேர்தலுக்காக மட்டுமே என்று கார்கே சுட்டிக்காட்டினார்.
“இரட்டை இன்ஜின்” அரசு மணிப்பூரின் அப்பாவி மக்களின் வாழ்க்கையைச் சூறையாடிவிட்டது என்றும், மோடியும் அமித் ஷாவும் அனைத்து சமூகங்களையும் காட்டிக் கொடுத்துவிட்டதாகவும் கார்கே கூறினார்.
குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டபோதிலும் வன்முறை தொடர்வதாகவும், சட்டம்-ஒழுங்கை பராமரிக்கும் பொறுப்பு பாஜகவுக்கே உண்டு என்றும் அவர் வலியுறுத்தினார். மோடியின் குறுகிய பயணத்தில் வருத்தமோ, குற்ற உணர்வோ இல்லை என்றும், தனக்கென ஒரு பிரமாண்ட வரவேற்பு விழாவை அவர் ஏற்பாடு செய்ததாகவும் கார்கே தெரிவித்தார்.
இது, துன்பப்படுபவர்களின் காயங்கள் மீது விழுந்த அடி என்று விமர்சித்த அவர், “உங்கள் ராஜதர்மம் எங்கே?” என்று மோடியை அவரது சொந்த வார்த்தைகளிலேயே கேள்வி எழுப்பினார்.